தூரத்து கட்டைவிரல்



தயங்கி நிற்கையில்
மென் அழுத்தத்தில்
முன்தள்ளுவதும்
தடுமாறித் துவளுகையில்
தன் திறன் கூட்டி
மேலேற்றுவதும்
மனக் காயங்கள் மீது
மயிலிறகு கொண்டு
மருந்திடுவதும்
திகைத்து விழிக்கையில்
திசை கண்டு
நம்பிக்கையூட்டுவதும்
மேடையில் நிற்கையில்
தூரத்திலிருந்து
கட்டைவிரல் உயர்த்துவதும்
ஒடுங்கி நிற்கும்போது
ஒரு வாய்ப்பளியுங்குள் என
யாசிப்பதும்
நடுங்கும் விரல்களில்
பிரியத்தின்
கதகதப்பைப் பகிர்வதும்
மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலித்தும்கூட பற்றிய கை
விடாமலிருத்தலும்
அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்
மிக எளிதுதான்!
யோசித்துச்
சொல்ல வேண்டுமெனில்...
சற்றுக் கடினம் தான்!
இன்னும்....
உண்மையாகச்
சொல்ல வேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை அண்ணா.