இதெல்லாம் ஒரு சமூக சேவை பாஸ்!

ஒவ்வொரு சாமானியனின் கனவும், தனக்கென ஒரு செல்போன் வாங்குவதாக இருந்தது ஒரு காலத்தில். இப்போது அது ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதாக மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி தனக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, இலவசமாக கிடைக்கும் எல்லாவித செயலிகளையும்(Apps) நிறுவிக்கொள்வது வேட்கையாக மாறியிருக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் வாட்ஸ் அப், வைபர், டெலகிராம் போன்ற அரட்டைச் செயலிகளை நிறுவும்போது, உலகம் சுருங்கிப்போவது கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும், மிரட்சியும் கொப்பளிக்கிறது. உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் உறவுடனும் நொடிப்பொழுதில் உரையாடிவிட முடிகிறது. வாழ்க்கையை இலகுவாக்கிட வரும் அறிவியல் சாதனங்கள் வரும்போது வரம் போலத்தான் தெரிகின்றன. ”காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி” என ஊரில் ஒரு சொலவடை சொல்வார்கள். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, இதுபோன்ற அரட்டைச் செயல்களைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொருந்தும். வரமாய் இருந்தவை ஒரு கட்டத்தில் அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய சாபமாக மாறிவிடுகிறது





வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை நிறுவிக்கொண்டவர்கள் அதற்குள், என்னவெல்லாம் இருக்கிறதெனத் தேடிப்பார்க்கிறார்கள். குழு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிருப்பதைக் கண்டவுடன் உடனே தாங்களும் ஒரு குழுவை ஆரம்பிக்கிறார்கள். குழுக்களில் 20% அவசியமானதாக, தொடர்புடையதாக, பயனுள்ளதாக இருக்கலாம். 80% குழுக்களில் பெரும்பாலும் அதன் அட்மின் எனப்படும் நிர்வாகியைத் தவிர மீதி அனைவரும் ஒருவருக்கொருவர் அறியப்படாத நபர்களாக இருப்பார்கள்.

 

யாரோ ஒரு குழு நிர்வாகியால் இழுத்துவிடப்படும் நம் முகப்பு படமும், கை பேசி எண்ணும் குழுமங்களில் இருக்கும் யாரென்றே தெரியாத பலநூறு பேருக்கும் பந்திவைக்கப்படுகிறது. பெண்களின் முகப்பு படம், கை பேசி எண்கள் தனக்கு அறிமுகமும், அவசியமும் இல்லாத உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பல நூறு பேருக்கு கிடைக்கும்போது அதனால் வரும் ஆபத்துகள் குறித்த சிந்தனை குழு நிர்வாகிக்கோ அல்லது அதிலிருக்கும் பெண்களுக்கோ தெரியாமல் இருப்பதுதான் கொடுமை. இதுபோன்ற குழுமங்களில் மிக எளிதாக ஒரு ஆபாச படத்தையோ, காணொளியையோ ஒருவர் நொடிப்பொழுதில் ஏற்றிவிட்டு அனைவரின் கை பேசிக்குள்ளும் அதை கொட்டிவிட முடிகிற ஆபத்தும் இருக்கின்றது.

அடுத்ததாக இந்த அரட்டைச் செயலிகளில் இருக்கும் மிகப்பெரிய அபத்தமும், ஆபத்தும் தனக்கு வரும் ஒரு செய்தியை, அதன் உண்மைத்தன்மை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நண்பர்களிடமோ, குழுக்களிலோ பகிர்வது.


அரட்டைச் செயலிகளின் வாயிலாக அரசு ஆம்புலன்சின் எண் தற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறது, குளிர்பான பாட்டிலில் எய்ட்ஸ் நோயாளியின் இரத்தம் கலக்கப்பட்டிருக்கிறது, இந்த செய்தியை அனுப்பினால் உங்கள் கணக்கில் ஐம்பது ரூபாய் கிடைக்கும் என்பது போன்றவை சலிப்பேயின்றி காலம் காலமாய் பகிரப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


சென்னையில் வீடுவீடாக திருடுபவர் என ஒரு காவல் ஆய்வாளரின் குரல் பதிவோடு ஒரு பெண்ணின் படம் பரப்பப்பட்டது. அதை லட்சக்கணக்கானவர்கள் பகிர்ந்து சமூகக் கடமையாற்றினார்கள். அதை உண்மையென்று நம்பிய சில செய்தித்தாள்கள், அந்த பெண் படத்துடன் செய்தியாகவும் வெளியிட்டனர். சிலநாட்கள் கழித்து அதே பெண்ணின் படம் போட்டுதான் மும்பையில் வேலை பார்ப்பதாகவும், தன் படத்தை வேண்டுமென்றே யாரோ பயன்படுத்தி பெயரைக் கெடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வர அதையும் லட்சக்கணக்கானவர்கள் பகிர்ந்து சமூகக் கடமையாற்றினார்கள். அந்த மறுப்புச் செய்தியும் பொய் என ஒரு தகவல் பரவியபோது கிறுகிறுத்து மயக்கமே வரும்போல் இருந்தது.

”இரத்தம் தேவை” என வரும் வேண்டுகோள்கள் தர்மநியாயம் பார்க்காமல் பரப்பப்படுகின்றன. குறைந்தபட்சம் அதிலிருக்கும் எண் வேலை செய்கிறதா? அந்தச் செய்தி உண்மைதானா? எங்கு இரத்தம் தேவைப்படுகிறது? என்பதுபோன்ற அடிப்படைக் கேள்விகள் ஏதுமில்லாமல் பகிர்வதில் மட்டும் வெறித்தனமாய் இயங்குகிறார்கள். இப்படியானவற்றை ஏன் வெறிகொண்டு, தன் நண்பர்களுக்கு, குழுமங்களுக்கு அனுப்புகிறார்கள் என ஆராய முற்பட்டால், முதலில் அவர்கள் புரிந்து வைத்திருப்பது, தான் செய்வது ஒரு ”சமூக சேவை” என்றுதான்.


”எனக்கு வந்துச்சு, நான் நாலு பேருக்கு அனுப்பிட்டேன், எதாச்சும் நல்லது நடந்தா நல்லதுதானே பாஸ்” எனும் மொக்கையான சமாதானத்தில் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.


தாங்கள் அனுப்புவது உண்மையானதா, அவசியமானதா என ஆராய்வதைவிட, வந்த சூட்டோடு சூடாக அனுப்பிவிடுவது என்பது துரிதமான சமூக சேவையென்றே கருதுகிறார்கள்.


”இல்லை அதிலிருக்கும் எண்ணில் தொடர்புகொண்டு எதும் விசாரித்தீர்களா!?” எனும் கேள்விக்கு “நாம ஏன் வெட்டியா செலவு பண்ணிக்கூப்பிடனும்” என்பார்கள். இந்தியாவில் எந்த நகரத்தில் இருக்கும் எண்ணை தொடர்புகொண்டாலும் அதிகபட்சம் ஒரு ரூபாய் செலவு ஆகுமா!?.


இதில் ஏற்படும் செலவு, அழைப்பு எடுக்கும் சிரமத்தைவிட, தனக்கு வந்ததை இன்னொருவருக்கு அனுப்பிவிடுவதே சமூகத்துக்கு ஆற்றும் சேவையென திருப்தியுறும் நோய்மை மனப்பாங்குதான் இங்கு சிக்கலே.


சமீபத்தில் ”RK.R school bus accident in kovilpatti bypass road. 30 LKG children serious. pls prayfor them” எனும் ஒரு செய்தி வாட்ஸப் வழியே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தது. அப்படி ஒரு செய்தியை தொலைக்காட்சிகள் பார்க்கவில்லையே என இணையத்தில் தேடினால், 2012ம் ஆண்டே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் 2012 வெளியான அந்த ஃபேஸ்புக் நிலைத்தகவலுக்கு, இன்று வரைக்கும் ”அய்யய்யோ” என அதிர்ச்சி தெரிவித்தும், ஆண்டவனை பிரார்த்தனை செய்வதாகவும் கணினி பாவிக்கக்கூடிய அளவிற்கு கல்வியறிவு கொண்டிருப்பவர்கள் பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


எதையும் புனிதப்படுத்தாதே, கேள்விக்குட்படுத்து என்பதுதானே அறிவின் விதி. எல்லாவற்றையும் வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே அணுகக்கூடிய ஒரு மனநிலையும்தான் இப்படியான பகிர்வுகளுக்கு காரணம் எனச் சொல்லலாம். ஒரு சொடுக்கில் உலகம் முழுமைக்கும் ஒன்றை பரப்பிவிடும் வேகமான காலத்தில் நான் இருக்கின்றோம். தவறுதலாய் பரப்பப்படும் ஒரு எண் வழியே வரும் அழைப்புகள் எவ்வளவு பெரிய மன உளைச்சலைக் கொடுக்கும் என்பது பற்றியெல்லாம் பரப்புபவர்கள் அறிவார்களா!?.

 

இந்தியாவில் கை பேசிகளின் எண்ணிக்கை 93 கோடியைக் கடந்துவிட்டது எனும் செய்தி வந்திருக்கும் நிலையில், 2013ம் ஆண்டு 7.5 கோடியாக இருந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015ல் 16 கோடியாக மாறும் என ஒரு அறிக்கை சொல்கிறது.

சமூக சேவையெனும் நினைப்பில் தவறான அல்லது போலித் தகவல்களை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் அதன் மூலம் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெருகும் என்பதை நினைத்தால் மிரட்சியாக இருக்கின்றது.

-

விகடன்.காம் பகுதியில் வெளியான கட்டுரை. நன்றி : விகடன்

கீச்சுகள் தொகுப்பு : 53



நாம் நினைக்கும் காரியம் ஏதாவது ஒருவகையில் நடந்துவிட்டால் மட்டும் போதாது. அது எப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே நிகழவும் வேண்டும். அதைவிட அது எப்படி நடக்கக்கூடாது என நினைக்கிறோமோ, அதுபோல் நடந்துவிடாமல் இருப்பதும் முக்கியம்!

-

வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம்.

-

விஜயகாந்த் ஜோக்னு ஆளாளுக்கு அனுப்புறதுல 99% சர்தார்ஜி ஜோக்குகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதா இருக்கு!

-

எதாவது சிக்கல்கள், சவால்கள் வந்தால்தான் கொஞ்சமாவது சுறுசுறுப்பு வருது!

-

ஆமாம்நீங்கள் ஏன் கோட்டையின் பெருங்கதவுகளை பூக்களைக் கொண்டு தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!?

-

அன்பாய் ஓடிவந்து நீங்கள் மாலை சூட்டுவதற்கு நன்றி சொல்கிறேன்! அதிலிருந்து பின் கழுத்தினைப் பதம் பார்க்கும் முட்களை நான் என்ன செய்ய!?

-

அக்கம்பக்கம் கேட்டு, கூகுளில் தேடி நிமிடப்பொழுதில் தீர்த்துக்கொள்ளவேண்டிய சந்தேகத்தை, ட்விட்டர்ல போட்டு நாள்கணக்கில் தீர்த்துக்கொல்கிறோம




கவலையற்று இருப்பதற்கான ஒரு எளிய வழி கவலைப்படுவதற்கு அவகாசம் தராமல்பிசியாக இருப்பது.

-

மனநிலையை எழுத்தில், சில வார்த்தைகளில் பகிர்ந்துகொள்வதென்பது ஒருவித விடுபடல்.

-

தான் மதிக்கும்/விரும்புபவரிடமும், தன்னிடம் இருப்பதுபோலவே அனைத்து கீழ்மைத்தனங்களும் கூடக்குறைய இருக்கலாமென்பதை ஏற்றுக்கொள்ளாதவன் முட்டாளா!?

-

எந்த முன் உணர்த்தலுமின்றி வந்திருக்கும் இந்த மார்கழி மதிய மழைக்குஅழையா விருந்தாளிஎன்றெல்லாம் பெயர் சூடிட முடியாது.

-

டீ - 10 காசு அஸ்கா டீ - 15 காசுனு இருந்தது அந்தக்காலம் டீ - 10 ரூவா நாட்டுச் சக்கரை டீ - 15 ரூவானு இருப்பது இந்தக்காலம்!

-

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் வீட்டம்மனி வெளியே போயிருக்கும் நேரத்தில் பொறுப்பா துண்டு ஒன்னைக் கட்டிக்கிட்டு, முன்னெச்சரிக்கையா ஒரு பக்கெட் குளுந்தண்ணியை தலையோடு ஊத்திக்கிட்டு, மொட்டை மாடியில் சடசடக்கும் கார்த்திகைச் சாரல் மழையில் ஓடிப்போய் நனைவதென்பது கொஞ்சமே கொஞ்சூண்டு வயசு கரைக்கும் முயற்சிதான்!

-

மழையில் நனைந்து சிந்தும் இவ்வழகிய மஞ்சள் வெயிலில் எந்த நினைவுகளை உலர்த்துவதென இன்னும் தீர்மானிக்க இயலவில்லை!

-

தற்கொலை முயற்சிக்கு தண்டனை கூடாதுனு புரிஞ்சுக்கவே இவ்ளோ நாள் தேவைப்பட்டிருக்கு. அவர்களுக்கு மனநல ஆலோசனை தரவேண்டும்னு உணர எவ்ளோ நாளாகுமோ!?

-

ஒரு செய்தி / தகவல் வந்தால், அதைப் பகிர்ந்துகொள்வதிலிருக்கும் ஆர்வத்தில் 1000ல் ஒரு பங்குகூட அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதில் இல்லை.





வழக்கமாய் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வோம். இப்போது தண்ணீரையே சுத்தம் செய்கிறோம்!

-

திருவிழாக்கள் கடவுளை முன்னிறுத்தியே என்றாலும், அதில் மிஞ்சி நிற்பது கூடிமகிழும் மனிதர்களின் உறவுகள்தான்.

-

புதுசா சைனாஆன்ட்ராய்ட்போன் வாங்கின பக்கி, Wi-Fi பேட்டரி சார்ஜ் பண்ணிக்க முடியாதானு கேக்குது!

-

செல்ஃபியர்களின் அதிமுக்கியப் பிரச்சனைஇந்த கை இன்னும் நீளமாய் வளர்ந்திருக்கலாமே!”



ஒருபோதும் உலகில் கேள்விகள் தீர்ந்துபோவதில்லை. நீங்கள் அளிக்கவேண்டிய பதில்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டேயிருங்கள்!

-

'உப்பு, காரம் பாருங்க' என காலையில் நீட்டப்படும் தட்டில் இருப்பது, எலிப் பொறியில் வைக்கப்படும் மசால் வடையின் இடமாறு தோற்றப்பிழை தான்!





ஒரே செயலை கட்டாயத்தின்பேரிலும், விருப்பின்பேரிலும் வேறுவேறு மாதிரி அணுகுவதிலிருந்து, இந்த மனது எப்போது மாறத்துவங்கும்!?

-

உங்கள் குழந்தையின் நட்பு வட்டம் ஆரோக்கியமானதா?


எல்கேஜி படிக்கும் நவீன் தன் அப்பாவிடம் கிசுகிசுப்பாக தன்னுடன் படிக்கும் வர்சினி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டதாகச் சொல்கிறான்.


ஐந்தாம் வகுப்பு மாணவி நிகல்யாவின் புத்தகப் பையில் கோணல்மாணலாய் படம் வரையப்பட்டு ”ஐ லவ் யூ … பை ஆகாஷ்” எனும் கசங்கிய தாள் கிடைக்கிறது.


ஒன்பதாம் வகுப்பு மாணவன் கரண் போதையில் வகுப்பிலேயே விழுந்து எழுகிறான்.


கணவனை இழந்து, பிள்ளைக்காகத்தான் இந்த வாழ்க்கையென வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது தாயின் ஒற்றை மகனான பத்தாம் வகுப்பு படிக்கும் சுதாகர் இனி வாழ்வது எதற்காக என்று சிந்திக்கிறான்



இவை மிகக்குறைவான உதாரணங்களே. இதுபோல் இன்னும் எத்தனையெத்தனையோ சம்பவங்களை நாள்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம் அல்லது கடந்து செல்கிறோம்.



குழந்தையின் கேள்வியை எதிர்கொள்ள முதலில் குழந்தை மனது தேவைப்படுகிறது. குழந்தைகளின் முதல் உலகம் பெற்றோர்கள்தானே. தன் முதல் உலகத்தில் தன் கேள்விக்கு சரியான பதில் கிடைக்கிறதா, தன் செயலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கிறதா, தான் பேசவிரும்புவதை பேச வாய்ப்பு கிட்டுகிறதா என்பதை எதிர்பார்க்கும் குழந்தைகள் தோற்றுப் போகும்பொழுது, தனக்கான வேறொரு இடத்தைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.



தன் கேள்விக்கு இசைவான பதில் தருபவர்களை, தன் செயலுக்கான அங்கீகாரத்தைத் தருபவர்களை, தான் சொல்வதை காது கொடுத்துக் கேட்பவர்களையே தன் நட்பாக பிள்ளைகள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்படி அமையும் நட்புகள் எப்படிப்பட்ட நட்புகளாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களின் நட்பு வட்டம் அமைகின்றது.



நட்புகளாய் அமையும் சக வயது பிள்ளைகள் அல்லது உறவுகளிடமிருந்துதான் பெரும்பாலான புதிய புதிய விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள். பொதுவாகவே தன் மனதுக்கு பிடித்துவிட்டால், அது யாராக இருந்தாலும், அவர்கள் செய்யும் செயல்களில் ’ஹீரோயிச’த்தைக் கண்டு கொள்கிறார்கள். அந்த ஹீரோயிசக்காரர்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் தானும் செய்து பார்க்க வேண்டும் அல்லது தனக்கும் வேண்டும் என எளிதாக ஆசைப்படத் துவங்குகிறார்கள். இப்படி ஆசைப்படத் துவங்குவதில் சில நல்லதும் நடக்க வாய்ப்புண்டு, சில சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பன் (அ) தோழி செய்யும் நல்ல விசயங்களை ஓரளவு தானும் செய்யவிரும்பும் பிள்ளை, அதே நண்பன், தோழி செய்யும் தகாத விசயங்களை ஆர்வத்தின் பேரில், அதில் என்ன இருக்கும் எனும் குறுகுறுப்பின் பேரில் இரண்டு மடங்காய் செய்து பார்க்க விரும்புகிறார்கள்.



புகை பிடிப்பது, எளிதாய்க் கிடைக்கும் சில வேதியல் பொருட்களை போதைக்குப் பயன்படுத்துவது ஆகியவற்றை  இன்றைய குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அதன் கிளையிலிருந்து தேடி வேர் வரை சென்றால் முதலில் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொண்டு வந்த பிள்ளை, அதை தன் வீட்டிலிருந்தோ, உறவுகளிலிருந்தோ அல்லது வீட்டிற்கு வரும் நட்புகளிடமிருந்தோதான் கற்றுக் கொண்டிருக்கும்.



குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளும், போதைப் பழக்கங்களும் பெரும்பாலும் நெருங்கிய உறவு, நட்புகளிடமிருந்தே முதலில் துவங்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா உறவுகளிடம் சரியாக கிடைக்காத அங்கீகாரம், நட்புகளிடம் மிக எளிதாகக் கிடைக்கும்போது அவர்களிடம் ஒன்றிப்போய்விடுகிறார்கள். ஒன்றிப்போன உறவுகள் திணிக்கும் கெடுதல்களை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது பழகிக்கொண்டு அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.



வீட்டில் தான் அல்லது தன் பேச்சு கவனிக்கப்படவில்லை எனும் பிள்ளை, தன்னை கவனிக்க வைக்க, தன் பேச்சைக் கேட்க வைக்க தான் செல்லும் பள்ளி வாகனத்தில் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க முயல்கிறது. தன் வகுப்பு அல்லாத நட்புகளிடமிருந்து ஆர்வமாய் வித்தியாசமானதைக் கற்றுக்கொள்ள முயல்கிறது. இப்படிக் கற்றுக்கொண்டு தன் வகுப்பில் விதவிதமாய் பகிர்ந்து கொள்கிறது. அப்படி ஆரம்ப காலத்தில் கற்றுக்கொண்டு வருவதை தன்னையுமறியாமல் வீட்டிற்கு வந்தவுடனே பகிர்ந்துகொள்ள முனைவார்கள். அதை யாரும் கவனித்து அங்கீகரித்தால் தொடர்ந்து அந்த பகிர்வு நிகழும். அங்கீகாரம் கிட்டவில்லையெனில் முழுக்க முழுக்க தன் நட்புகளுக்குள்ளான உலகத்திற்குள் மூழ்கத் துவங்கிவிடுகிறார்கள்.



பொதுவாக தாத்தா பாட்டிகள் இல்லாத, அப்பா அம்மா இருவரும் வேலைக்குப் போகும் சூழலில் குழந்தைகள் பேச வருவதை நட்பாகக் கேட்க வீட்டில் ஆளில்லை என்பதே நிதர்சனம். அப்பா அம்மா வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகளிடம் குழந்தைகளாக மாறிப் பேசுதல் மிகக் குறைந்து போய்விட்டன. டிவி, செல்போன், இணையம் என எல்லோரையும் ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக்கொள்வதால் யாருக்கும் வீட்டில் பேசும் அவசியமே அற்றுப்போய்விடுகிறது.



விளையாட்டு, திரைப்படங்கள், விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்கள், தொலைக்காட்சிகள், இணையப் பயன்பாடு என எதிலுமே முதலில் அவர்கள் நேரிடையாக அனுபவப் படுவதைவிட, அவர்களின் நட்புகளின் பரிந்துரையிலேயே மிக எளிதாக தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.



குழந்தைகளிடம் முதலில் நாம் நட்பாய் இருத்தல் மிகமிக அவசியம். அவர்களின் முதல் நண்பர்கள் அம்மா, அப்பாவாகத்தான் இருக்க வேண்டும். வெளியுலக நட்புகள் எல்லாம் அதன் பின்புதான். பொற்றோர், குழந்தைகளின் நண்பர்களாகி அவர்களின் உலகத்திற்குள் நுழைந்து அவர்களின் விருப்பங்கள் என்னவாக இருக்கின்றன, அந்த விருப்பங்களை எதிலிருந்து, யாரிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம். பிள்ளைகளின் நட்புகள் யார்? ஆசிரியத் தோழமைகள் யார்? யாரோடு அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வதும், அவர்களோடு முடிந்தவரையில் நட்பில் இருப்பதையும் பெற்றோர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடமும் அவ்வப்போது பேசி, தமது பிள்ளைகளின் நட்பு வட்டம் சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை, வீட்டுக்கே அழைத்து வருமாறு சொல்லலாம். வீட்டுக்கு வரும் நண்பர்களை நீங்கள் மதிப்பிட்டாலே, தீய நண்பர்களிடமிருந்து விலக்கி வைக்கவும் முடியும். அதேபோல நல்ல நட்பு வட்டத்தையும் உங்கள் பிள்ளைக்கு ஏற்படுத்தித் தரமுடியும்.





-
செல்லமே ஜனவரி 2015 இதழில் வெளியான கட்டுரை. நன்றி செல்லமே!