நீள் பயணத்தின் பின்



நீள் பயணத்தின் பின்
வீடு வந்தாயிற்று
மகளை அணைத்தாயிற்று
மனைவியைக் கொஞ்சியாயிற்று
அம்மா அப்பாவிடம் பேசியாயிற்று
அலுவலகம் வந்தாயிற்று
மின்மடல்களுக்கு பதில் தந்தாயிற்று
அழைப்பிதழ்களின் தேதி குறித்தாயிற்று
நண்பர்களோடு தேநீர் அருந்தியாயிற்று
காத்திருப்புகளுக்கு பதில் சொல்லியாயிற்று
விசாரிப்புகளுக்கு தலையசைத்தாயிற்று
காசோலைகளுக்கு யோசித்தாயிற்று
தவறிய அழைப்புகளுக்கு மன்னிப்பு கோரியாயிற்று
கிட்டிய உதவிகளுக்கு நன்றி பகிர்ந்தாயிற்று
உறவுகளிடமும் அன்பை உரசியாயியிற்று
இன்னபிறவென எல்லாமாயிற்று..
ஏனோ நான் என்னிடம் மட்டும்
இன்னும்  பேசிடவேயில்லை!


-

GKN School நண்பர்களைத் தேடி....!



கிட்டத்தட்ட இது பத்தாண்டு கனவு. ஆனால் இரண்டு நாட்களாய் நினைவுகளில் தளும்பிக்கொண்டேயிருக்கிறது. வேறொன்றுமில்லை. என் பள்ளி நண்பர்களைச் சந்திக்கவேண்டும் என்பதுதான்


 

ஹாஸ்டலில் போட்டால்தான் பையன் ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்குவான் எனும் (மூட)நம்பிக்கையில் அப்பா என்னையும் 1989ல் 11ம் வகுப்பிற்கு உடுமலை அருகே உள்ள கரட்டுமடம் (புங்கமுத்தூர்) என்ற ஊரிலிருக்கும் காந்தி கலா நிலையம் என்ற பள்ளி, விடுதியில் சேர்த்துவிட்டார். அங்கே என்ன நடந்தது என்பதெல்லாம் மறந்துபோன தருணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வகுப்புத்தோழன் சௌந்தர்ராஜன் ஃபேஸ்புக் மூலம் தொடர்புக்கு வந்தான்.

சமீபத்தில் ஓராண்டுக்கு முன்பு வகுப்பு, விடுதித் தோழன் சிவசுப்பிரமணியம் ஃபேஸ்புக்கில் அடையாளம் கண்டு தொடர்புகொண்டு பேசியபோது என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பல படங்களை அனுப்பியபின் அடையாளம் கண்டு கொண்டேன்



பேசிப்பார்க்கையில்தான் தெரிந்தது, அவன் மாமனார் வீடு நான் இருக்கும் வீட்டிலிருந்து இரண்டாவது வீதியில் இருக்கிறதென்று. ஒருமுறை பெங்களூரில் இருக்கும் அவன் வீட்டிலும், ஈரோட்டில் மாமனார் வீட்டிலும் என சந்தித்த நட்பு நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது

கதிர். நான் சுப்ரமணியம் பேசுறேன். GKN நாம ஒன்னாப் படிச்சோம்

புதுக்கோட்டை சுப்ரமணியமா!?”

அட ஆமாம்…. சைன்டிஸ்ட்னு கூட எல்லாரும் சொல்வீங்களே

நல்லா ஞாபகம் இருக்குப்பாஎன உரையாடல் தொடர்ந்தது.

அவனும் ஃபேஸ்புக்கில் இருக்க, சிவசுப்ரமணியத்திடமிருந்து எண் பெற்று பேச, அடுத்த நாளே அவரவர்களுத்தெரிந்த நண்பர்களின் பெயர்களையெல்லாம் சொல்ல, யாரெல்லாம் வாட்ஸப்ல இருக்காங்க எனத் தேடியதில், இதுவரை ஏழுபேரை இனம் கண்டிருக்கிறோம். கோவை சௌந்தர்ராஜன், திருச்சி REC கல்லூரியில் பணியாற்றும் கார்வேம்பு, கரூர் தன பால கிருஷ்ணன், அமெரிக்காவில் இருக்கும் பாலாமணி, அருள், விஷ்னு என பட்டியல் வளர ஆரம்பித்திருக்கிறது.

நாங்கள் அனைவரும் GKN பள்ளியில் 11ம் வகுப்பில் இணைந்த ஆண்டு 1989. மிகச்சரியாக இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. பள்ளியைவிட்டு வெளியேறிய ஆண்டு 1991. அதைக் கணக்கில் எடுத்தால் 2016.... 25ஆம் ஆண்டாக அமையும்.

பத்தாண்டு நிறைவடையும் தருணத்தில் ஒரு முறை உட்பட பல தருணங்களில் நான் அனைத்து நண்பர்களையும் எப்படியாவது ஒன்று திரட்டி ஒரு சந்திப்பை நிகழ்த்திடவேண்டுமென்பது அடங்க மறுத்த ஒரு கனவு. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களின் பெயரையும் நான் மறந்துவிட்டிருக்கிறேன். அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்த அந்த ஆட்டோக்ராப் புத்தகம் எங்கேயென்று உடனே தேடியாக வேண்டும்.

நேற்றைக்கு மதியம் முழுக்க நான் சிவசு, சுப்பிரமணியம் என வாட்ஸப்பில் குழு உரையாடல் நடத்திக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு பெயர்களாக அவர்கள் சொல்லச் சொல்ல பின்னோக்கி நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்தேன்.

படிக்கும் காலத்தில் சைன்டிஸ்ட் என்ற சுப்பிரமணியம்தான் படிப்பில் படு ஷார்ப். ஒரு விஞ்ஞானி அதுவும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிடவேண்டும் என்பது அவன் கனவு. அதையெல்லாம் விட முக்கியம் பெண்களின் பக்கமே திரும்பிக்கூடப் பார்க்காதவன். எப்போதும் ராக்கெட் பற்றியே பேசியதால் சைண்டிஸ்ட் என்ற பெயர் வந்தது. பள்ளிகுறித்த நினைவுகளில் கிட்டத்தட்ட எல்லோரும் மறந்திருந்த சூழலிலும் கூட எனக்கு ’சைண்டிஸ்ட்’ சுப்பிரமணியம் பெயர் மட்டும் நினைவிலிருந்தது. ஆந்திராவில் இருக்கும் ஏதோ ஒரு ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானியாக சுப்பிரமணியம் இருப்பான் என்பது போன்ற பிம்பம் மட்டும் நினைவிலிருந்தது. மூன்று நாட்களுக்கு முன் அழைத்தபோது கோழிக்கோட்டில் IIM துறையில் பேராசியராக இருப்பதாகச் சொன்னபோது சிறிய ஏமாற்றமும், கூடவே வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமும் ஏற்பட்டது.

வாட்ஸப் குழு அரட்டைக்கு வருகிறேன். நேற்று மதியம் பிரியாணி தின்ற களைப்பிலும் அவர்கள் இருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவரவர் நினைவில் இருக்கும் நண்பர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, பொறுக்க முடியாமல் ”அடப்பாவிகளா எல்லாம் ஆம்பிளைங்க பேராவே சொல்றீங்ளே! நம்மகூட ஆறேழு பொண்ணுங்க வேற படிச்சாங்கப்பா, ஒருத்தராச்சும் அவங்க பேரைச் சொல்றீங்ளா….? சுப்பு நீ ஒன்னும் இதுக்கெல்லாம் வெட்கப்பட்டுக்காதே… சிவசு… அந்த பொண்ணுங்க எங்காச்சும் தெரிஞ்சா சொல்லு” என்றேன். மனதிற்குள் பச்சை தாவணிகள் படபடத்துக்கொண்டிருந்தன.  50 ஆண்ட்கள் படிச்ச வகுப்பில் ஆறேழு பொண்ணுங்கதான் என்றிருந்த வறட்சி, இதுவரை ஒரு பெண்ணின் பெயர்கூட அடிபடவில்லையே என்பதில் கடும் வறட்சியானது!

உடனே சிவசு ஒரு குறிப்பிட்ட எழுத்தைச் சொல்லி அதிலிருந்து ஆரம்பிக்கவா எனக் கேட்க, அன்றுபோல் இப்போது வெட்கப்பட்டுக்கொண்டு சுப்பு அமைதியாகவே இருப்பான் என்ற நினைப்பில் ஒரு ராக்கெட் விழுந்ததுபோல சுப்புவிடம் இருந்து ஒரு வரி வந்து விழுந்தது

“அந்த பொண்ணுங்கள்ள சிலர் பாட்டி கூட ஆகியிருக்கலாம்”

படபடத்த பச்சைத்தாவணிகள் எல்லாம் பொசுக்கென புயல் காற்றில் பறந்துபோகத் தொடங்கிவிட்டன.

மீண்டும் நிரூபனமானது “சைண்டிஸ்ட் சைண்டிஸ்தான்யா….!”

நண்பர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் பள்ளியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என விரும்புகிறார்கள். அதே சமயம் இதை பெரிய அளவில் நிகழ்த்தவேண்டுமென எனக்குள் ஆவல் பிறந்திருக்கிறது.

இன்றைக்கு பள்ளியின் முகப்பு படம் ஒன்றை இணையத்தில் கண்டேன். வளாகச் சுவருக்குள் பசுமை குலுங்கும் அந்த வேப்பமரத்தின் குளுமை மனதெங்கும் பரவியது. அது ஒரு கிராமப்புற பள்ளிதான். மேற்குத்தொடர்ச்சி மலை தழுவிவரும் காற்று எப்போதும் வீசிக்கொண்டெயிருக்கும். அந்தக்குளிரின் மிச்சம் இன்றளவும் மனசுக்குள் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றது.

உடனிருந்த அனைவரையும் உதிர்த்துவிட்டு, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கழித்து தேடும் பயணம் இது. இலக்கு அடைவோமா எனத் தெரியவில்லை. எனினும் இந்தப் பயணம் இனிக்கவே செய்யும்.

இதை வாசிக்கும் நீங்கள் ஏதாவது ஒருவகையில் எங்களுக்கு உதவமுடியும்….
 
1989-1991 உடுமலை, புங்கமுத்தூர் (கரட்டுமடம்) காந்தி கலா நிலையத்தில் (GKN) படித்தவர்கள் பற்றிய விபரங்கள் இருப்பின் தயவுசெய்து பகிருங்கள்.
தொடர்புக்கு :

-

மலையாளக் கரையோரம் - 2



அவ்வப்போது பார்த்த சில மலையாள மொழிப்படங்கள் குறித்த சில வரிப் பதிவுகள். முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை தவிர்த்து, அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.
 




ரெட் வைன் (Red Wine) - மலையாளம்

ஒரு அமெச்சூர் நாடக நடிகனும், கம்யூனிஸ்ட் சகாவுமான (தோழர்) ஃபஹத் ஃபாசில் ஒரு லாட்ஜில் மர்மமாய் கொலை செய்யப்படுகிறார். பிரபலமான உள்ளூர் கம்யூனிஸ்ட் பிரமுகர் என்பதால் கொலையாளியைக் கண்டறிய போலீஸ் வேகமாக முடுக்கி விடப்படுகிறது.

காதல் திருமணம், சிக்கலில் வேலை, கழுத்தை நெருக்கும் வீட்டுக் கடன் தவணைகள் என ஆசிப் அலியை வாழ்க்கை ஓட ஓட விரட்டி நெருக்கிறது.

கொலையைக் கண்டுபிடிக்க வரும் மோகன்லால் கொலையாளியையும், கொலைக்கான காரணம், கொலைக்கு பின்னணியிலிருக்கும் இரண்டு மாஃபியா உலகத்தைச் சூழ்ந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கிறார்.

விடியலில் ஒட்டும் அஞ்சலி போஸ்டரில் தெரியும் ஃபஹத் ஃபாசில் முகமும், 34 என்ற வயதை கை நடுங்க டி.ஜி.ரவி மாற்றும் காட்சியும் மனதை என்னவோ செய்கின்றன.

உள்ளூர் கம்யூனிஸ்ட்சகாவாய் வரும் ஃபஹத் ஃபாசில் மனதின் மையத்தில் நின்று ஆட்சி செய்கிறார். எப்படி இந்த மனுசன் எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடுகிறார் என ஆச்சரியமாக இருக்கின்றது.

ஒருவனின் நெருக்கடி மிகுந்த சூழலை ஆதிக்கம் செய்யும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி பயன்படுத்திக் கொள்ளும், எதன் வரைக்கும் அவனைத் தள்ளிக்கொண்டு போய் நிறுத்தலாம் என்பதைக் காண்பது பல எச்சரிக்கைகளைத் தருகிறது.

கொலைக்கான முடிச்சுகள் அவிழ்ந்தாலும் தீர்வும் விடையும், கிட்டுகிறதா என்பதுவும் முக்கியம். கடைசிக் காட்சியில், உறைந்த விழிகளில் உறையும் கேமரா என்னவோ இம்சை செய்யும்.

-



நத்தொலி ஒரு சிறிய மீனல்ல - மலையாளம்
(Natholi Oru Cheriya Meenalla)


வசதி படைத்த பல தரப்பட்ட மக்கள் வாழும் ஒரு குடியிருப்பின் கேர் டேக்கரா வரும் பிரேமனை (ஃபஹத் ஃபாசில்) ஒரு கிள்ளுக்கீரையாகப் பாவித்து நடத்துகின்றனர். ஒரு சூழலில் அவர்களிடம் அடி உதை படவேண்டியும் வருகிறது.

வெறுத்து மனம் வெதும்பும் பிரேமன் ஒரு கதை எழுத ஆரம்பிக்கிறார். பிரேமனே வேறு ஒரு பெயரில் கதையின் நாயகனாக, அபார்ட்மெண்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறார்.
அபார்மெண்ட்வாசிகளை பாத்திரமாக்கி தான் நினைத்தபடி ஆட்டுவிக்கிறார்.

பிரேமன் அபார்மெண்ட் வாசிகள் மேல் தான் கொண்டிருக்கும் உணர்வுக்கு ஏற்றார்போல் எப்படியெல்லாம் அவர்களை நடத்த விரும்புகிறான், அவர்களுக்கு என்னவெல்லாம் நிகழவேண்டும் என விரும்புகிறான் என்பதை மிக நுணுக்கமாக, அழகாக காணமுடிகிறது.

பிரேமன் விருப்பத்திற்கேற்ப பாத்திரங்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், ஏதாவது சூழல்களில் எழுத்து தடைபடும்போது, அந்தப் பாத்திரங்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதும், குழம்பித் திரிவதும் ரசிப்புக்குரியவை. குறிப்பாக கமலினிமுகர்ஜிக்கு காரில் லிப்ட் தருகிறேன் என ஃபஹத்ஃபாசில் கட்டாயப்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டு வேகமாகச் செல்லும் காட்சியில், பிரேமன் பேனாவை வைத்துவிட்டு வெளியே போக, எங்கு போகிறோம், ஏன் போகிறோம் எனத்தெரியாமல் காரைத் திருப்பித் தவிப்பது.

சகமனிதர்கள் மேல் நாம் கொண்டிருக்கும் வெளிப்படுத்தவியலாத நொடிப்பொழுது உணர்வுகளை பிரேமன் எழுத்து வழியே நிறைவேற்றும்போது பல இடங்களில் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளத் தோன்றுகிறது.

படம் பார்த்து முடிக்கும்போது, ஒரு பிடித்த நாவலைப் படித்த உணர்வும், ஒரு மௌனமும் நம்மைச் சூழும் என்பதை மறுக்க முடியாது!

-



வீட்டிலுக்குள்ள வழி (Veettilekkulla Vazhi) - மலையாளம்

இறக்கும் தறுவாயில் மருத்துவமனையில் இருக்கும் இளம் பெண்ணொருத்தி, அங்கிருக்கும் மருத்துவரிடம் (பிருத்விராஜ் - படத்தில் டாக்டருக்கு பெயரே கிடையாது) தன் இறுதி ஆசையாக கேரளாவில் இருக்கும் தன் 5 வயது மகனை தன் கணவன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான இந்தியன் ஜிகாதி அமைப்பின் பொறுப்பில் இருக்கும் அப்துல் சுபான் தாரிக்கிடம் ஒப்படைக்கவேண்டும் எனும் வேண்டுகோளோடு இறந்துபோகிறார்.

அந்தஅப்துல் சுபான் தாரிக்தான் டெல்லியில் குண்டுவைத்து தனது மனைவி, மகனுடன் 7 பேரைக் கொன்றவன் என்பதைத் தெரிந்தும் கேரளாவில் ஒரு மலைக் கிராமத்து பள்ளியில் இருக்கும் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு தாரிக்கிடம் ஒப்படைக்கப் புறப்படுகிறார்.

அங்கிருந்த ஆசிரியை சொன்னதற்கேற்ப அந்த அமைப்பில் உள்ளரசாக்கை தேடி இராஸ்தான் போகிறார். அங்கிருந்து அவர்கள் சொல்வது போலவே புஷ்கர், ஆஜ்மீர், ஜெய்சல்மார் என பயணப்படுகிறார். ஆஜ்மீரில் அந்த அமைப்பினர் மேல் நடந்த என்கவுண்டரில் தப்பி ஓடுகையில் தனது செல்போனை தவறவிட்டுவிட்ட டாக்டர், போலீசாரால் தேடப்படுபவராகவும் இருக்கிறார்.

கடைசியாக லடாக் சென்று, காத்திருந்து ஒரு வழியாக எதிர்பாராத சூழ்நிலையொன்றில் தாரிக்கை சந்திக்க முடிகிறது.

ஒரு பெண் கேட்டுக்கொண்டதற்காக, ஒரு மருத்துவர் இத்தனை சிரமப்படுவார என்ற கேள்விக்கு கடைசியாக டாக்டர் சொல்லும்
பந்தங்களின் வில அறியன், ரெண்டு மார்க்கமே, ஒன்னு நஷ்டப்படனும் அல்லெங்கிள் திரிச்சுக்கிட்டனும்என்பது போதுமானதாகவே இருக்கின்றது.

90
நிமிடங்களுக்கு குறைவாக ஓடும் இந்தப் படம் மிக எளிதாக ஒரு ஈரானியப் படம் பார்த்த உணர்வை தந்தது மறுக்கமுடியாத ஒன்று.

-