மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி


பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.

தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப் புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.



என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம் கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக் கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில் இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும் அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.

மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும் சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?

சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”மட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது. சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச் சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”ட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.

பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில் மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.

சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின் துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.

பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் மிக நிச்சயமாகக் காணவேண்டும். 

இந்த உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன். படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.




ன்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்

-

பூர்த்தியான முத்தம்




காதல் மிகுந்து
காமம் குழைந்து
நேசம் சொட்ட
நெஞ்சு பிசைய
உள்ளம் உருக
உணர்வு மிளிர
உயிர் குளிர
உதிரம் தகிக்க

சுற்றம் பாராது
சூழல் நோக்காது
எட்டிப் பறிக்கயெத்தனிக்கையில்
பொட்டெனக் கையில் விழும்
கனிந்த கொய்யா போலே
சட்டெனக் கிட்டுகிறது
ஒரு நீள் முத்தம்!

வேண்டியோ
விரும்பியோ
தாகத்திலோ
தவத்திலோ கிட்டுவதில்லை

ஒரு எதிர்பாராக்
கனவிலே கிட்டும்
இதழ்கள் உலரா ஈரம்கூடிய
ஒரு பூர்த்தியான முத்தம்!


-*-

டெல்லி - தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?


தன் வக்கிரத்திற்கு, தன் போதைக்கு போகிற வழியில் கிடைத்த பெண்ணை வன்புணர்வு செய்த டெல்லிக் கும்பல்....... சிக்கிக்கொண்டு தெளிந்த பிறகு, தான் மனச் சிதைவு கொண்டவன் என்று சொல்வது குறித்தும், 9 மணிக்கு மேல் நண்பனோடு சென்றவளுக்கு பாடம் கற்பிக்க வன்புணர்வு செய்ததாகச் சொல்வதை மதத்தோடு முடிச்சுப்போட்டு விவாதிப்பதும் ஆரோக்கியமானதில்லை.




மனச்சிதைவு, மத உணர்வு என அவர்கள் சொல்ல முயல்வது தப்பிப்பதற்கான, ஒரு புத்திசாலித்தன மனோபாவமே தவிர... வேறல்ல.... அது குறித்து விரிவாகப் பேசி விவாதிப்பதே அவர்களின் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஒப்பானதும்.

கண்ணுக்குத் தெரியாத கற்பு அழிந்துபோனதாகச் சொல்வதை விட்டுத்தள்ளுங்கள். இந்த மாதிரியான வன்புணர்வு அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுதும் மனதிற்குள் எத்தனையெத்தனை இயலாமை வலியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ஒரு பெண்ணாக அவளுக்குள் நிகழ்ந்த இயலாமைப் போராட்டம் கொடிதினும் கொடிது. புணர்ந்ததை விட, இயலாமைப் போராட்டத்தை அவள் மேல் ஏவிவிட்டதே கொடும் வக்கிரம்,

எக்காரணம் கொண்டும் எதற்கும்மரண தண்டனை கூடாதுஎன்போரும் கூட இதில் அவன்குறிஅறுக்க வேண்டும் எனத் தளர்ந்து முரண்பட்டபோது இனம்புரியா ஒரு மனச்சூழலுக்குள் ஆளானேன்! அந்த முரண்பட்டை விட நிகழ்வின் கடும்தாக்கம், அவர்களையறியாமல் உள்ளுக்குள் இருந்து பேசவைத்திருக்குமோ என்றும் தோன்றியது.

இது குறித்து கேள்வியுற்ற, வாசித்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நீதிபதி உணர்ச்சிப் பூர்வமான தீர்ப்பினை எழுதிக்கொண்டேதான் இருக்கின்றார்.

டெல்லி காவல்துறை தூக்குத் தண்டனைக்கு பரிந்துறை எனச் செய்திகளைப் பார்க்கும் போது, மக்கள் உணர்ச்சியை சமாளிக்க ஒருவேளை என்கவுண்டர் நிகழ்த்தப் படலாம் அல்லது வழக்கு நடந்து முடிவில் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனைகூட விதிக்கப் படலாம்….. எப்படியாக இருப்பினும் இவர்களுக்கு விதிக்கப்படுவது மிக அதிகபட்ச தண்டனையாகவே இருக்க வேண்டும். அந்தத் தண்டனை இதுபோல் செய்ய முயல்வோருக்கு மிகப் பெரிய அச்சத்தை அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்து கிடையாது!

சரி... தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?

ஆண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற கிடைத்த பெண்ணை வன்புணர்வு செய்வது, கிடைக்காத அல்லது உடன்பட மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவது போன்ற பலதரப்பட்ட வக்கிரச் சூழலுக்கு ஆட்படா  மனோபாவத்தை, அறத்தினை வளர்க்க மறந்து அல்லது மறுத்துவிட்டு....

இது போன்று நிகழ்ந்தபின் குறி அறுக்க வேண்டும் அல்லது முச்சந்தியில் நிறுத்தி கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்பதெல்லாம் நம் தற்காலிகமாக அறச்சீற்றம் அல்லது மேலதிக
உணர்ச்சிகளுக்க வேண்டுமானல் தீனிபோடலாம்.


-

அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்

இப்பொழுதெல்லாம் மாதத்திற்கு இரண்டு முறை நடைபெறும் எங்கள் அரிமா சங்கக் கூட்டத்திற்கு என் மகளின் வருகை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அங்கு குழந்தைகளுக்கென தனியாக நடத்தப்படும் விளையாட்டுகளே முக்கியக் காரணம்

வழக்கம்போல் அன்றைக்கும் மிகச்சரியாக தாமதமாகவே அவளை அழைத்துக்கொள்ள வீடு சென்றேன். காத்திருந்து காத்திருந்து அழைத்துச் சலித்தவள், நான் செல்லும்போது வாசலில் காத்திருந்தாள். போனவேகத்தில் பைக்கில் ஏற்றிக்கொண்டு சிறிது தொலைவு கடந்தபோது வழக்கம்போல் வயிற்றைப் பிணைத்து பிடித்திருப்பவளின் கையில் ஏதோ ஒன்று கூடுதலாக இருப்பதை உணர முடிந்தது. பார்த்தால் செல் போன். பயன்படுத்திய ஒரு பழைய சிறிய போனில் எதற்கும் வீட்டிலிருக்கட்டுமே என ஒரு சிம் போட்டுவைத்ததை, ஆரம்பம் முதலே அது தன்னுடைய செல்போன் என சிரத்தையாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறாள்.

பலமாதங்களாக அதில் இருப்பது ரூ.3.73 மட்டுமே என்பதாலும், அதுவும் குறையாமலே இருப்பதாலும், அந்த செல் குறித்து பெரிதாக மெனக்கெடுவதில்லை. எப்போதாவது யாரிடமோ அவள் “என் போன்ல மூனு ரூபா எழுபத்தி மூனு காசு… அதும் எப்போ புடிச்சு அப்படியே வெச்சிருக்கேன் தெரியுமா?” எனச் சொல்வதைப் புன்னகையோடு கேட்டு நகர்வதுமுண்டு.

”எதுக்குடா செல் எடுத்துட்டு வந்தே”

”உங்களுக்கு கூப்ட்டுட்டு வெச்சிருந்தேம்பா, அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்”

”செரி குடு” என வாங்கி அப்பொழுதே அணைத்து என் கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டேன். அதில் ஏதோ ஒரு அற்ப திருப்தியையும் உணர்ந்தேன். குழந்தைகளுக்கு எதுக்கு செல்போன் எனும் பிற்போக்கு(!) எண்ணம் என்னுள் கொஞ்சம் அதிகம்!

***

எங்கள் சங்கத்திற்கென்று புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி புதிய கட்டிடத்தில் முதலாவது கூட்டம் அது. கூட்டம் நிறைவடைந்து. மூன்றாவது மாடியில் உணவரங்கம். முதல் கூட்டம் என்பதால் உணவு பரிமாறும் இடத்தில் ஒழுங்குபடுத்த முடியவில்லையென்பதால் கூட்டம் ஒருமாதிரி அல்லாடியது.

உணவுக் கூடத்தில் தட்டேந்திக் கொண்டிருந்தபோது மகள் தேடிவந்தாள்.

“சாப்ட்டியாடா குட்டி”

“சாப்ட்டேம்பா”

“செரி இரு…. சாப்ட்டு வந்துர்றேன்”

”என் செல்லக் குடுங்ப்பா” என அவளாகவே என் காற்சட்டைப் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டாள்.

நான் சாப்பிட்டு கையளம்பும்போது, கட்டிடப் பொறுப்பு அலுவலர், ”சார் லிப்ட்ல யாரும் ஏறாம பார்த்துக்குங்க, ஜென்ரேட்டர்ல ஓடுது, மேலே போய் ஆஃப் பண்றேன்” என என்னை நிறுத்திவிட்டு ஓடினார்

நான் நின்ற இடத்தில் லிப்ட் மூடியிருந்தது. பொத்தானை அழுத்த வந்தவர்களை, ”படியில எறங்கிடுங்க, ஆஃப் பண்ணப்போயிருக்காங்க” எனத் திருப்பிவிட்டேன்.

லிப்ட் அணைக்கப்பட்டது. ஒரு சின்ன சந்தேகம் வந்தது. மூன்றாவது தளத்தில் மூடியிருந்தாலும் வேறு தளத்தில் அணைக்கும் போதுயாராவது ஏறியிருந்தால் என்னாகும் என்று.

அவரைக் கேட்டேன், “வேற யாராச்சும் லிப்ட்ல இருந்தா”

”எங்கேயிருந்தாலும் அடுத்த ஃப்ளோர்ல நின்னுடும் சார்”.

வீட்டுக்குக் கிளம்ப மகளைத் தேட ஆரம்பித்தேன். உணவரங்கத்தில் காணவில்லை. கீழே விளையாடிக் கொண்டிருக்கலாம் எனக் கீழே வந்தேன். எந்தத்தளத்திலும் இல்லை.

ஒரு கணம் வயிற்றில் ஒரு பந்து உருண்டது. ஒருவேளை லிப்டில் இருந்தால்? மீண்டும் மேலே வரை ஒவ்வொரு தளமாக லிப்ட் திறந்திருக்கிறதா எனத் தேடியபடி ஓடினேன். எந்த அறிகுறியும் இல்லை. லிப்டில் இருக்கக்கூடாது என நினைத்துக்கொண்டே அவளிடம் இருந்த போனுக்கு அழைத்தேன்

“அப்பா…. லிப்ட்ல இருக்கோம்ப்பா, கரண்ட் போயிடுச்சாட்ருக்குது, இப்ப என்ன பண்றது”

வாழ்க்கையில் முதன் முறையாக நிஜமாகவே மூச்சு அடைப்பதை உணர்ந்தேன்.

“நீ மட்டும்தான் இருக்கியா?”

“இல்லப்பா ஆறேழு பேர் இருக்கோம்”

கொஞ்சம் மூச்சடைப்பு தளர்ந்தது

”சரி… சரி…. ஒரே நிமிசம் பொறு, இப்ப ஆன் பண்ணச் சொல்றேன்” என்று சமாதானம் சொல்லிவிட்டு பணியாளரைத் தேடினேன். காணவில்லை. தேடினேன். தேடினேன்… தேடினேன்…. பதட்டத்தைக் கண்டு பலர் தேடத் துவங்கினார்கள். ஒருவழியாகக் கிடைத்தார்.

அதற்குள் மகளிடம் இருந்து அழைப்பு

“எப்பப்பா ஆன் பண்ணுவாங்க!?”

எனக்கு ஏனோ பயம் கூடியது.

“பொறு…பொறு…. இதோ வெறும் அரை நிமிசத்துல ஆன் ஆயிடும்டா”

அரை நிமிடம் அவ்ளோ நீண்ண்ண்ண்ண்………………டதா!?

லிப்ட் இயங்க ஆரம்பித்தது. வேறொரு தளத்தில் இறங்கி மேலே ஓடி வந்தாள்.

எதும் கேட்காமல், மெல்ல அணைத்தவாறு அழைத்துக்கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தேன்

இப்போது எதுவும் சொல்லவோ திட்டவோ கூடாது எனத் தீர்மானத்தோடு வார்த்தைகளை விழுங்கிக் கொண்டேன். குழந்தைகளிடம் செல்போன் இருக்கலாம் எனும் முற்போக்கு(!) புத்தி வந்தது.

வண்டியை எடுத்து சிறிது தொலைவு சென்றபின்

”எத்தனை பேருப்பா இருந்தீங்க?”

“ஏழு பேருப்பா”

”எல்லாமே கொழந்தைங்க தானா?”

”இல்லப்பா, நாங்க நாலு பேரு ஃப்ரெண்ட்சு, பெரியவங்க மூனு பேர்ப்பா”

”ஆஃப் ஆனவுடனே அவங்க போன் பண்ணியிருக்க வேண்டியதுதானே” அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை, அவளிடம் கேட்டேன்.

”அவங்களும் கூப்பிட்டாங்கப்பா, ஒருத்தருமே எடுக்கலையாம்”

கூட்டத்திற்கு சைலண்ட்-ல் தூங்க வைக்கப்பட்ட போன்கள் விழித்திருக்காது எனப் புரிந்தது.

“லிப்ட் நின்னவுடனே என்ன நினைச்சீங்க?”

“கரண்டு போயிருக்கும்னுப்பா”

”பயமா இல்லையா?”

”இல்லப்பா”

”அப்புறம் எதுக்குடா போன் பண்ணி எப்பப்பா ஆன் பண்ணுவாங்கனு ரொம்ப இதாக் கேட்டே”

அங்கையே எவ்ளோ நேரம் நிக்கிறதாம். போர் அடிச்சுது அதனாலதான் கூப்பிட்டேன்




மவனே, இந்த ”போர் அடிக்குது”ங்ற வார்த்தையை கண்டுபிடிச்சவன் மட்டும் எனக்கு எதிரில் அப்போது வந்திருந்தால், கொலைக்கேசு ஆனாலும் சரினு வண்டிய அப்படியே ஏத்திக் கொலை செய்திருப்பேன். அப்போது தென்படவில்லை, அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 
*-*