வண்ணப்பிறைகள்



நினைவின் இமைகளில்
ஒவ்வொரு முறையும்
அமர்த்துகிறாய்
ஒரு துளி உற்சாகத்தை
அந்த முதல் சந்திப்பினைப்போலவே!

***

உதிர அணுக்களில்
வியர்வை உப்புக்களில்
முத்த ஈரத்தில்
கருவிழியின் வெளிச்சத்தில்
இடையறக் கலந்திருக்கும்
இனிய மாயம் ஒருபோதும்
புரிவதேயில்லை


***

என்னை நீயும்
உன்னை நானும்
அறியும் முன்னேயும்
கடந்து போயிருக்கின்றன
எத்தனையோ பிறைகள்

என்னை நீயும்
உன்னை நானும்
அறிந்த பின்னும்
கடந்து போகின்றன
எத்தனையோ பிறைகள்
வண்ணங்களைத் தூவியபடி!

***

கீச்சுகள் - 20


காலம் மிகப்பெரிய கரைப்பான்!

*

நன்றி வேறு, அன்பு வேறு!

*

குழந்தைகளால் மிக எளிதாக நம் உலகத்தை அவர்கள் உலகமாக மாற்றிட இயலுகிறது.

*

குட்டிக் குறும்புகளாலும் மழலைக் கீதங்களாலும் குழந்தைகளே உலகை புதுமைப்படுத்துகின்றன!

*

ஈமூகோழிக்கு ஒரு லட்சம் கட்டினால் மாதம் 10 ஆயிரம் தருவதாக ஒருகுரூப்புகிளம்பியிருக்கு. அதிலும் ஒருகுரூப்புபணம் கட்டுது! :(

*



சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல் # வெளிநாடு சுற்றுலாக் கையேடா இருக்கும்!


*

கணவரை போனில் அழைக்கும்போது மட்டும் இந்த பெண்கள் எப்படித்தான் முகத்தைடெர்ரராகவைத்துக் கொள்கிறார்களோ! #பயிற்சியெடுங்கப்பா கணவர்களே :)

*

தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர தயங்கமாட்டேன் - கருணாநிதி #இவருக்கு நிஜமாவே இப்ப என்னதான் பிரச்சனை?

*

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிஎன்பதைபுதிய மதுரை ஆதீனம்’ விநாயகன் மாதிரி, குறுக்கு வழியில அடைஞ்சிட்டாரு போல. #நித்தி ஒரு கோடி நிதியளிப்பு

*

டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்துவது அவசியம் - மன்மோகன் சிங் # மறக்காமபாலிடால்விலையை குறைச்சிடுங்க! :(

*

இந்தியன் அதிலும் தமிழன் நேரத்தின் அருமையை உணர்வதே சந்திப்புகளில் பச்சை விளக்குக்கு காத்திருக்கும் சொற்ப நொடிகளில்தான் #மவராசனா இருங்கப்பா

*

கோபமா இல்லாதபோது கோபமா இருக்கியானு கேட்டாலும், சந்தோசமாக இல்லாதபோது சந்தோசமா இருக்கியானு கேட்டாலும் கோபமே வருது #என்னங்டா இது! :)))

*

அடைய முடியாததை அடைவதற்கும் பிடிபட்டதிலிருந்து விடுபடுவதற்கும் அவசியத் தேவையாக இருப்பதுமறுபரிசீலனை

*

ஒரு சாமானியனை அயர்ச்சிக்குள்ளாக்கி, அடித்து வீழ்த்துவதில்... நித்தியானந்தா போன்றவர்களுக்கு கிடைக்கும் அதீத மரியாதைக்கும் பங்குண்டு! :(

*

ஆய்வு செய்யவும், தெளிவடையவும் இந்த வாழ்நாள் போதாது போல!

*

கோடை கால சிறப்பு(!) வகுப்புகளில் கொதித்துப் பொசுங்கும் குழந்தைகள் பாவம்! #விளையாடாப் பொழுது வெறும் பொழுது

*

எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்எத்தனை முறை உணர்ந்தாலும், உறைப்பதில்லை.

*

அதீத அன்பிலும், அதீத கோபத்திலும் வரும் வார்த்தைகளுக்கு ஆயுள் குறைவு!

*

சைக்கிள், பைக், கார், வேன், லாரி, பஸ் - எதை ஓட்டுறவங்களும், ஒரு கைல செல்போன் பேசிட்டே ஓட்டுறாங்களே இந்தியா அந்த அளவுக்கா வளர்ந்துடுச்சு!

*

சட்டசபை இடை நீக்கம் - விஜயகாந்த் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி # ’சட்டம் ஒரு இருட்டறைபடத்தை ரீமேக் பண்ணிடலாமா கேப்டன்!

*

இனி எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்: ராமதாஸ் #ச்ச்ச்சே எப்படி உத்து உத்து படிச்சாலும்எந்தத் தேர்தலிலும்னே என் கண்ணில் படுது!

*

தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன் - கருணாநிதி #முதல்ல உங்க பிள்ளைங்க பஞ்சாயத்த தீர்க்க எதாச்சும்ஹசாரே வழிஇருக்கானு பாருங்க!

*

பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றவாளி - உச்சநீதிமன்றம் #ங்கொய்யாலே நம்மூர்லகசாப்க்கு தண்டனை நிறைவேத்த வக்கில்ல. அவன் அவன்தான்யா! :(

*

2 மணிக்கு சாப்பிட வேண்டிய சாப்பாட்டை, 12 மணிக்கேஎன்ன சோறா இருக்கும்?”னு நினைச்சா, அது ஆசீர்வதிக்கப்பட்ட பொழுது. பாதி சாப்பாட்டின்போது கூடஎன்ன சோறுஎனும் உணர்வற்று சாப்பிட்டால் அது சபிக்கப்பட்ட பொழுது! #சோத்துத்துவம்

*

ஒரு வாகனம் பதிவு செய்யப்படும்போது, ஒரு மரக் கன்று நடவேண்டும் என சட்டம் இருந்தால் நாடு எப்படியிருந்திருக்கும் #சின்னச்சின்ன ஆசை

*

ஊடல் தின்னும் ஒற்றை முத்தமாய்... வெயில் குழம்பு தின்று பசியாறுகிறது ஒற்றைப் பெருமழை

*

கோபித்துக் கொள்வதற்கும், கோபமற்று கடந்து செல்வதற்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகமிக மெல்லியதுதான்!

*

உலகத்தில்மோசடிகளில் ஏமாறுகின்றவர்களின்எண்ணிக்கை, உலக மக்கள் தொகையைவிட அதிகம் ஆயிடும் போல இருக்கே! :))))

 
தேர்வு எழுதும்போதுபிட்வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் இனி விளம்பரம் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

*
 
அடிமைகளைப் பிடிக்கிறது. அடிமைகள் தங்களுக்கு அடிமைகளைத் தயாரிக்கும் போது பிடிப்பதில்லை!

*

பேருந்துகளில்கோயமுத்தூரு ஒன்னு குடுங்என்போர் படிக்காதவர்களாகவும், “ஒன் கோயம்ப்ட்ட்டூர்என்போர் படித்தவர்களாகவும் அறியப்படுகின்றனர்

*

மௌனத்தின் குளிர்ச்சியும், மௌனத்தின் வெப்பமும் மௌனத்தை அனுபவிப்பவர்களுக்கே தெரியும்!

*

எவர் கண்ணீரில்தான் நீங்கள் இனிப்பைக் கண்டுவிட முடியும்!

*

இறந்த நண்பரின் அலைபேசி எண்ணை அழிக்கும்போது, இன்னொருமுறை மரிக்கச் செய்தேன். :(

*

கோப நெருப்பில் மிஞ்சுவது ஆற்ற வேண்டிய காரியங்களின் சாம்பல் மட்டுமே!

*

நெருங்கவும், வருடவும் முடிகிறது நினைவில் எவரையும்!

*

வருடாவருடம் வெயில் அதிகம் என்று புலம்பினாலும். இந்த ஆண்டு வெயில் மிகக்கொடியது. மரங்களற்ற மாநகர் எனும் ஈனப்பெருமை ஈரோடுக்கும் பொருந்தும்.

*

வர வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் நிச்சயம் வருவார்” - பண்ருட்டியார் #வர வர சட்டசபையிலேயும்பன்ச்டயலாக் பேச ஆரம்பிச்சிட்டீங்ளா!?

*

"ஈழத்து எம்.ஜி.ஆர் டக்ளஸ் தேவானந்தா" - சுதர்சன நாச்சியப்பன் # ஏன் பாஸ் ஈழத்துலராஜீவ்காந்தி, ராகுல்காந்தியெல்லாம் யாருமே தென்படலையா?



ஒவ்வொருவர் மனதும் ஒரு தனி உலகம்.

*

பூசூடுபவருக்கு ஏற்ப தன் தன்மையை, வாசத்தை மாற்றுவதில்லை

*

தமிழகத்தில் இந்த ஆண்டு 84 மாணவ / மாணவியர் படிக்க முடியவில்லை, காதல் தோல்வி என தற்கொலை செய்துள்ளனர் #இது பெரிய பயங்கரவாதமா இருக்கே!?

*

"கட்டுப்பாடா இருக்க வேண்டும்" என முடிவு செய்ததில், கட்டுப்பாடாக இருக்கிற கொடுமை வேறெதிலும் இல்லை!

*

ஏன் ரொம்ப டல்லா இருக்கே?”னு உண்மையா கேக்குறவங்களைவிட, ”என்ன செம ஃப்ரெஷ்ஷா இருக்கே?”னு பொய்யாய் கேட்கிறவங்களைப் பிடிக்குது #மன மாயை

*

எல்லாரும் ஒரே மாதிரியே இருந்துட்டா உலகம் அலுத்துப் போய்விடாதா?

*
எதை நோக்கி நகரக்கூடாது என விரும்புகிறோமோ, அதை நோக்கி நகர்வதுதான் வாழ்க்கையின் விந்தை!

*

குரு என்பவர் உடனிருப்பவராக இருக்க வேண்டியதில்லை, கற்பவன் மனதில் குருவாக இருந்தாலே போதும்.

*

சில நேரங்களில் சிலரிடம் நாம் சின்னக் குழந்தைதான்

-

அந்நியப்பட்டிருக்கும் அருகாமை மலைக்கிராமங்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத காடு சுத்தமான காற்றை, மிகமிக சுத்தமான காற்றை மீண்டும் மீண்டும் தந்துகொண்டுதான் இருக்கின்றது. அதை அனுபவித்து, நுரையீரல்களில் நிரப்பிட அடர்த்தியான வனங்களுக்குள் புகுந்து வந்தால்தான் முடியும். மேலோட்டமாகப் பார்க்கையில் காடு என்பது வெறும் காடாகத்தான் தெரியும். நெருங்கிப் பார்க்கையில்தான் அது ஒரு நாட்டின் இதயம் என்பது, அதுதான் நிஜமான சொர்க்கம் என்பதும் புரிகிறது.



அரிமா சங்கம் ஆற்றும் மக்கள் சார்ந்த கடமைகளில் சில மருத்துவ முகாம்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஈரோட்டில் நான் சார்ந்திருக்கும் சுப்ரீம் அரிமா சங்கம் இந்தமுறை உளப்பூர்வமாக ’கரளயம்’ எனும் கிராமத்தில் நடத்திய மருத்துவமுகாமில் கலந்துகொள்ளும் ஒரு தனித்துவமான வாய்ப்பு கிட்டியது. இந்த முறை புற்றுநோய், மூட்டுமாற்று சிகிச்சைக்கான கண்டறிதல் முகாம் ஈரோடு கேன்சர் செண்டர் மற்றும் மாருதி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கரளயம் ஈரோட்டிலிருந்து சரியாக 101 கி.மீ தொலைவில் உள்ளது. கோபியிலிருந்து பங்களாப்புதூர் சென்று சத்தி சாலையில் தாசப்பகவுண்டன் புதூர் எனும் இடத்தில் வலது பக்கம் பிரிந்து சென்றால், சத்தி வனச்சரகம் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து துவங்கும் பாதையில் இருமருங்கிலும் அடர்த்தியான மரங்கள் தலையாட்டியாட்டி நம்மை வரவேற்கின்றன. மிகப்பெரிய வளைவுகள், மிகப்பெரிய ஏற்றம் என எந்தத் தொந்தரவும் இல்லாமல் மலைப்பாதை அழகாய் வளைந்து நெளிந்து நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. எதிரில் வரும் வாகனங்களுக்கோ, ஒதுங்கும் வாகனங்களுக்கோ இடம் அளிக்க சிரமப்படும் அளவிற்கு சிறிதாகவே அமைந்துள்ளது சாலை. 

சுமார் 20 கி.மீ பயணத்திற்குப் பிறகு கடம்பூர் வருகிறது. அதுவரை அடர்த்தியான காடுகளினூடே மலையேறிய நமக்கு ஆச்சரியமாக இருப்பது அங்கிருக்கும் விவசாய நிலங்களான சமதளப்பரப்பு. ஓரளவுக்கு தட்பவெட்பம் மிதமாக இருக்கும் மலைப்பகுதி அது. அங்கிருந்து 12 கிமீ தொலைவில் கொஞ்சம் கொஞ்சாமாக இறங்கினால் இருப்பது கரளயம்.
சத்தியிலிருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து கடம்பூர், கரளயம், காடகனல்லி வரை சென்று திரும்புகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாமுக்கு முதல் நாளே ஏற்பாடுகளைக் கவனிக்க என மருத்துவர்கள், சிப்பந்திகள், எங்கள் அரிமா சங்க பொறுப்பாளர்கள் என சனிக்கிழமை இரவே சென்றடைந்தோம். இருளில் சென்றடைந்ததால். ஊர் குறித்து ஒன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை. 

இரவு அங்கிருக்கும் ஒரு நடுநிலைப் பள்ளியிலேயே ஜமுக்காளத்தை விரித்து, நண்பர்களோடு அரட்டை, சிரிப்பு என நடுநிசிவரைக் கடத்தி உறக்கம் கைக்கொண்டு, காலையில் மலையின் சிலுசிலுக்கும் குளிர்ச்சியில் விழித்தோம். அருகாமையில் இருக்கும் தோட்டத்து கிணற்று பம்புசெட்டில் குளியல் என எங்களைத் தயார்படுத்திக் கொண்டோம்.





முகாமுக்கான ஏற்பாடுகள், பயனாளிகளை அழைத்து வருதல் என எல்லா வகையிலும், அந்தப்பகுதி மலைக் கிராமங்களில் இயங்கிவரும் ’ஏகல்’ என்ற கல்வியமைப்பு கவனித்துக்கொண்டது. கரளயத்தில் இருக்கும் ஸ்ரீராம் நடுநிலைப்பள்ளியில் 18 ஆண்டுகளாக பணியாற்றும் தலைமையாசிரியர் துரைராஜ் தலைமையிலான அணியினர் அருகிலிருந்து மலைக் கிராமங்களிலிருந்து மக்களை அழைத்துவர ஆவண செய்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் ஆச்சார்யா எனப்படும் ஆசிரியர்கள் மூலம் அங்கிருக்கும் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அழைத்து வந்திருந்தனர். கிட்டத்தட்ட அப்படி 40 கிராமங்களிலிருந்து மக்களை திரட்டி வந்திருந்தது பாராட்டுதலுக்குரியது. லாரி, வேன், சிறிய வேன், ஜீப் என இடங்களுக்கு தகுந்தவாறு வாகங்களை அனுப்பி அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒன்பது மணியளவில் பயனாளிகள் குவியத் துவங்கினார். மருத்துவக் குழுவுக்கு உதவியாக வரும் பயனாளிகள் விபரங்களைப் பதிவு செய்து, அவர்களுடைய விபரங்களைக்குறித்து, அதற்கான அட்டை வழங்கி ஒழுங்குபடுத்தும் பணியை எடுத்துக்கொண்டேன். நேரம் கடக்கக் கடக்க பயனாளிகளின் எண்ணிக்கை நூறு, இருநூறு என தொடர ஆரம்பித்தது. அவர்கள் அனைவருமே கரளயம் சுற்றுப்புறத்தில் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சின்னச்சின்ன கிராமங்களைச் சார்ந்தவர்கள்.

முகாமில் பரிசோதித்துக்கொள்ள வந்தவர்களில் 90% படிப்பறிவு இல்லாதவர்களாகவே தெரிந்தனர். அவர்கள் குறித்த விபரங்களைக் கேட்கையில் மலைப் பகுதியினர் பேசும் மொழியிலே, அவர்கள் வேகமாகப் பேசுவதால் நமக்கு புரிவது மிகச் சிரமமாக இருந்தது. ஒவ்வொருவரையும் பெயர், வயது, ஊர் எனக் கேட்டு பதிவு செய்வதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் விதவிதமான வட்டார வழக்குகள் இருப்பது வாடிக்கை. ஆனால் மலைக்கிராமம், அதுவும் கர்நாடக மாநில எல்லை எனும்போது அவர்களின் மொழி முழுக்க முழுக்க நம்மைவிட்டு அந்நியப்பட்டே இருக்கின்றது. பழங்குடியினர், இருளர், சோளகர், கவுடர்கள் என அப்பகுதி மக்களின் மொழி கன்னடம் கலந்த சிதைந்த தமிழாகவே இருக்கின்றது.

ஆணின் பெயர் சிக் மாதன் என்றிருந்தால், அவரின் தந்தை பெயர் தொட்ட மாதன் என்பது போன்றே பெரும்பாலான பெயர்கள் இருக்கின்றன. பெரும்பாலானோரின் பெயர் ஜடையப்பன், மாதன், மாதி என்றேயிருந்தது. தந்தை பெயர் தொட்ட மாதப்பன், மகன் பெயர் சிக் மாதப்பன் என்பதுபோலும் இருந்தது.

எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், தங்களைப் பதிவு செய்து கொள்ள நகர்புறத்து நாகரீக(!) மனிதர்கள் போல் விழுந்தடித்து, வரிசையைக் குலைத்து முன்னேற முற்படவில்லை. வரிசையில் எவ்வளவு நேரமாக இருந்தாலும், அலுப்பின்றி, சலிப்பின்றி பொறுமைகாத்து தங்கள் முறைக்காக காத்து நிற்கின்ற பண்பு அவர்களிடம் இருக்கின்றது. நம்மூரில் கோவில்களிலும் கூட மனிதர்கள் நெருக்கிடியடித்து, முண்டியடிப்பது நினைவில் வந்துபோனது.

10 சதவிகிதம் பயனாளிகள் மட்டுமே தங்கள் வயதை மிக உறுதியாக, சரியாக 42, 55, 61, 67 என்பதுபோல் சொல்கின்றனர். பெரும்பாலானோர் தோராயமாகச் சொல்லி, நீங்களே போட்டுக்குங்க என்றே சொல்கின்றனர்.

ஒரு அப்பாவும் மகளும் வந்தனர். முதலில் மகளின் விபரங்களைச் சொன்னார். அதில் மகளின் வயது 18 வயது என்றிருந்தது. அடுத்து அவர் குறித்து விபரங்களைச் சொல்லும்போது, அவருடைய வயது 28 என்றார். தூக்கிவாரிப்போட்டது. அப்பாவுக்கும் மகளுக்கும் 10 வயதுதான் வித்தியாசம் எனும் ஆச்சரியத்தில் திரும்பக் கேட்டபோது மகளுக்கு 18, தனக்கு 28 என்றே சாதித்தார்.


45 வயதுதான் எனப் போராடியவர்

குனிந்துகொண்டே எழுதியவாறு, ஒரு பெண்மணியின் விபரங்களைக் கேட்டபோது தனக்கு 45 வயதென்றார். குரல் கேட்டு சந்தேகத்தோடு நிமிர்ந்து பார்த்தபோது, அதிர்ச்சியில் உறைந்து போனேன். குறைந்த பட்சம் அந்தப் பாட்டியின் வயது 80-90 இருக்கும். ”என்னது 45 வயசா? எப்போ 40 வருசத்துக்கு முன்னாடியா!?” என்றபோது….

”அய்யோ இல்லைங்க சாமி எனக்கு 45தான் ஆகுது என்றார். பின்னால் இருந்த பெண், ’அவனப்புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ பாணியில் ”அந்தக் கெழவிக்கு 80, 90 போடுங்க சார்” என்றார். 45 வயதுதான் என அடித்துச் சொன்ன அந்தப் பாட்டியை வரலாற்றில் இடம்பிடித்து வைக்க படமொன்று எடுத்துக்கொண்டேன்.

அரிமா சங்கம் சார்பில், அன்று முகாமில் கலந்துகொண்ட அனைவருக்குமே மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மளிகைப் பொருட்களை இங்கிருந்து எடுத்துச் சென்று அப்பகுதி சமையல்காரர்கள் மூலம் உணவு சமைக்கப்பட்டது. 

மாலை 3 மணியளவில் கூட்டம் கிட்டத்தட்ட குறைந்தபோது முகாமில் பரிசோதித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 584 எனக் காட்டியது. அதில் சுமார் 40 பேருக்கும் மேல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் பாழ்படாத மலைக்கிராமத்தில் எப்படி புற்றுநோய்க்கான வாய்ப்புகள் எனக் கேள்வியெழுப்பிய போதுதான் தெரிந்தது. சாராயம், புகையிலை, கஞ்சா என அங்கிருக்கும் இருபால் மக்களின் போதைப் பொருட்கள் பழக்கமும் முக்கியக் காரணம் என்பது.



அடிப்படை நோய்களுக்கான மருந்துகள் பெரும்பாலான பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.



திட்டம் செம்மையாக நிறைவேற முதன்மைக் காரணம் சுப்ரீம் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா. மகேஸ்வரனும், திட்டத்தலைவர் அரிமா. செங்கோட்டையன் ஆகியோரின் நீண்டகாலத் திட்டமிடலே. மருத்துவமனைகளின் உதவியும் மருத்துவக் குழுவின் அர்பணிப்பும் போற்றுதலுக்குரியது. களப்பணியில் பெரிதும் உதவிய ஏகல் வித்யாலயா அமைப்பினர், விவேகானந்தா இரத்ததான சங்க உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.


எல்லாம் முடித்து கிளம்பும்போது, வானம் கறுக்கத்தொடங்கியது. ஆள் அரவமற்ற ஒற்றைச் சாலையில் வாகனத்தை ஊர்ந்து நகர்ந்து, கடம்பூரை அடைந்தபோது அருகிலிருந்து மலையொன்றினை மேகம் தின்று தனது பசியாறுவதுபோல் கவ்விக்கொண்டிருந்தது. அந்த மலைக்குள்ளும் மரங்களுக்கிடையே ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு தொட்டி (மலைக்கிராமம்) இருந்தாலும் இருக்கலாம் எனத் தோன்றியது.



மேகம் மழைத்துளியாய் முத்தமிட்டு விட்டுப் போயிருந்த காட்டுக்குள்ளிலிருந்து, விசுவிசுக்கும் காற்றும், ஆங்காங்கே கசியும் சிற்றோடைகளும் எங்களைவிட்டு பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. ஒரு கனவுபோல் கடந்து போயிருக்கிறது அற்புதமான அந்த வார இறுதி!

-0-



தனிமையின் மொழி! – CAST AWAY

தனிமை குறித்து பேசாத மொழிகள் ஏதேனும் உண்டா? பேசாத ஆட்கள் எவரேனும் உண்டா? ஆனாலும் தனிமை வரமா சாபமா என்பது புரியாத புதிர்தான். தனிமையை அற்புதமான வரமென்றும், கொடிய சாபமென்றும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். எதிர்பாராத தருணத்தில் திணிக்கப்படும் தனிமையை சாறு பிழிந்து தரும் படம் Cast Away.


ஆள் அரவமற்ற ஒரு நெடும் பாதையில் நான்கு சாலைப் பிரிவில் தொடங்கும் படம், அங்கேயே நிறைவடைகிறது.

ஒரு கொரியர் நிறுவனத்தைச் சார்ந்த சக் நோலன் (Tom Hanks) அலுவல் காரணமாய் காதல் மனைவியைப் பிரிந்து தொழில்முறை விமானப் பயணம் ஒன்று மேற்கொள்கிறார். விமானம் ஏறும்முன் அன்பு மனைவியோடு பிரியா விடை பெறுகிறார் வித்தியாசமான பரிசுகளோடு. மனைவி அளிக்கும் பரிசில் ஒரு கடிகாரமும், மனைவியின் நிழற்படமும் இருக்கின்றது. பயணத்தில் விமானம் விபத்துக்குள்ளாகிறது. கலங்கடிக்கும் ஒரு விபத்து. கடலில் விழுந்தவர் கரையொதுங்குகிறார். ஒதுங்கும் இடம் மனிதர்களற்ற ஒரு சிறு தீவு.

அடுத்தடுத்த நாட்களில் அலைகளில் கரையொதுங்கும் கொரியர் பெட்டிகளை எடுத்துவைக்கிறார். தான் பெற்ற ஒரு பெட்டியை மட்டும் பாதுகாத்து வைக்கிறார். திரும்பிய பிறகு அளிக்கவேண்டும் என்று.

அதுவரை மனிதர்களோடு புழங்கிவந்த மனிதனுக்கு தனிமை வலியத் திணிக்கப்படுகிறது. எவ்வளவு மறுத்தாலும் அந்தத் தனிமைய அவன் தின்று சீரணித்தே ஆகவேண்டிய நிர்பந்தம். முதல் நாள் இரவில் சிறு சிறு சப்தங்களுக்கு திடுக்கிடுபவனுக்கு அடுத்த நாளில் இருந்து குடிக்க தண்ணீர்கூட இல்லாத நிலையேற்படுகிறது. ஒன்று இல்லாத இடத்தில் தனக்கு வேண்டியதை உருவாக்க ஒவ்வொருவருமே விரும்புவதும், முயல்வதும் வாழ்க்கையில் விதி.

தேடும் முயற்சியில் அங்கிருக்கும் தென்னை மர இளநீர் ஒருவழியாக தீர்வாகிறது. பசிக்கு பச்சை மீன் உணவாகிறது. ஒரு கட்டத்தில் நெருப்பின் அவசியம் உணர்ந்து, உலர்ந்த குச்சிகளை உராய்ந்து தீ மூட்ட முயற்சித்து, தோற்று, மேலும் உழைத்து ஒரு கட்டத்தில் நெருப்பையேற்றுகிறார்

எடுத்துவைக்கப்பட்ட பார்சல்களில் வில்சன் என்ற பெயர் பொறித்த வாலிபாலில் அவர் இரத்தம் படிந்த கை படும்போது அதில் ஒரு மனித முகத்தை சிருஷ்டிக்கிறார். தனிமை அதன் பசிக்கு தன் பேச்சையும் தின்றுவிடுமோயென்று வெறித்தனமான அந்த பந்தோடு பேசத் துவங்குகிறார். யாருமற்ற தீவில் உற்ற மௌனத் தோழனாக பந்து மட்டுமே உடனிருக்கின்றது.

நாட்கள் நகர நகர தனிமை அடர்த்தியாகின்றது. தனிமை தீர்க்க வந்த தோழனாக அந்த பந்தோடு பேசுகிறார், சிரிக்கிறார், அழுகிறார், கோபத்தில் திட்டி வீசுகிறார், அழுது தேடுகிறார், தேம்புகிறார். மனிதனுக்கு சகமனிதனின் அருகாமை எவ்வளவு அவசியம் என்பதை மிகச் சிரத்தையாக புரியவைக்கிறது அந்தக் காட்சிகள்.

நான்கு வருடங்கள் கரைந்துபோல, வில்சனின் துணையோடு அவரை தனிமையைக் கடந்து காத்திருக்கிறார் தன் மீட்புக்காக. தனிமை அவரை உருக்குலைத்து உருவேற்றுகிறது.

கடலில் மிதந்து ஒதுங்கும் ஒரு உடைந்த படகின் ப்ளாஸ்டிக் பலகையை வைத்து கட்டுமரப் படகு தயாரிக்க முடிவுசெய்து, காய்ந்த மரங்கள், மரக்குச்சி நார்கள் என உழைத்து உழைத்து ஒரு படகை உருவாக்கி, காற்றடிக்கும் ஒரு தினத்தில் கரை தேடி நண்பன் வில்சனோடும், பாதுகாத்து வைத்த பார்சலோடும் பயணம் மேற்கொள்கிறார். நான்காண்டுகள் தன்னை அடைகாத்த தீவை விட்டு நகர்கையில் பிரியும் வலியை அந்த இசை மூலமும், பார்வைக்கோணம் மூலமும் யதார்த்தமாக உணர்த்துகின்றனர்.

பயணத்தினிடையே ஒரு புயலில் சிக்கி, சுறாவிடம் தப்பித்து, படகு சிதைந்து, வெறும் மரத்துண்டுகள் மூலம் பயணிக்கிறார். ஒரு சூழலில் நண்பன் வில்சனை பறிகொடுத்து, அவனைத்தேடி போராடித் தோற்று கதறுகிறார். இறுதியாய் அருகில் செல்லும் கப்பல் உதவியோடு கரை சேர்கிறார்.

இறந்துபோனதாகக் கருதப்பட்டவர் திரும்பி வந்ததில் அவர் நிறுவனம் பெருமகிழ்வு கொண்டு அவரை வரவேற்று விருந்தளிக்கிறது. காதோடும் நேசிப்போடும் சந்திக்க நினைத்த மனைவி, இவர் இறந்துவிட்டதாகக் கருதி இன்னொரு திருமணம் செய்திருப்பது கண்டு அதிர்கிறார். மனைவியின் கணவனே நிதர்சனங்களைச் சொல்லி மன்னிப்புக் கேட்கிறார்.

மழைபெய்யும் இரவில் மனைவியைச் சந்திக்க அவர் வீட்டுக்கு செல்கிறார். மனைவியின் கணவனும் மகளும் மேலே உறங்க, இவர்களுக்குள் நடக்கும் உரையாடல் ஒரு கவிதையாய்ப் பொழிகிறது. உன் மகள் அழகு என ’சக் நோலன்’ சொல்வதும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வைத்திருந்த காரை அவரை எடுத்துக்கச் சொல்லி அவர் மனைவி சொல்வதும், பிரியும் நிமிடங்களில் பெருமழையாய் பொழியும் அன்பும், ஆற்றெடுக்கும் காதலும் விடைபெறல் எவ்வளவு வலி மிகுந்ததென்று ஊட்டப்படுகிறது.

அந்த இரவு மனைவியின் நினைவாய் தான் தனிமையில் காத்திருந்து திரும்பியதை நண்பரோடு பகிரும் போது, தீவில் கட்டுமரம் கட்ட கயிறு ஏதுமில்லாமல், கடைசியாக மீட்டெடுத்த ஒரு தூக்குக் கயிறு குறித்த முடிச்சவிழ்கிறது.

தான் பாதுகாத்து வைத்த கொரியர் பெட்டியை அதன் முகவரியில் சேர்க்கிறார். அதைப் பெற அங்கு யாருமில்லாததால், தன்னைக் காப்பாற்றியது அந்தப் பெட்டியைச் சேர்க்க வேண்டிய கடமையும் என்பது போல் குறிப்பொன்று எழுதிவிட்டுப் புறப்படுகிறார். படம் துவங்கிய அதே நான்கு சாலைச் சந்திப்பில் அந்தப் பெட்டிக்குரிய பெண் சில வார்த்தைகள் பேசிவிட்டுச் செல்கிறார்.

நான்கு சாலைச் சந்திப்பில் அவரை நிற்க வைத்து, இப்போது எங்கு செல்லவேண்டும் என்பதற்கான தெளிவும், அவசியமும் அற்றிருப்பதை உணர்த்தியவாறு நிறைவடைகிறது படம்.

***

நன்றி அதீதம்

*

அந்த நேரம்





என்னிடம் 
கொஞ்சம் மிச்சமிருக்கிறது
சிந்தனைகள் ஏதுமற்ற நேரம்…

வேறு எண்ணில் நண்பனை  அழைத்து
கட்டைக் குரலில் கலாய்க்கலாமா?

கிடப்பிலிருக்கும் மின்மடலுக்கு
நீண்ட பதில் எழுதலாமா?

திருத்தம் வேண்டி நிற்கும்
கட்டுரையைச் செப்பனிடலாமா?

நயமாய்ப் பேசி நண்பனை
ஏமாற்றிப் பார்க்கலாமா?

வாங்கிய கடனுக்கு
வட்டி கணக்கிடலாமா?

வெளியூர் கல்யாணத்துக்கு
நண்பர்களைத் திரட்டலாமா?

சகோதர உறவுகளை
நலம் விசாரிக்கலாமா?

இலக்கியச்சண்டை எதையேனும்
வேடிக்கை பார்க்கலாமா?

தோழியர் எவரிடமாவது
சற்று கடலை போடலாமா?

நேற்றுப் பேசிய கூட்டத்தின்
நிழற்படம் அனுப்ப நினைவூட்டலாமா?

சிக்னலில் இடித்து முறைத்தவனைத்
தேடிப்பிடித்து திட்டலாமா?

ஊரில் இருக்கும் மகளைக்
கூப்பிட்டுப் பேசலாமா?

குடியில் செத்த குமார் குறித்த
கட்டுரை ஒன்று எழுதலாமா?

முதல் முத்தம் நினைவுகளை
சற்றே மீட்டிப் பார்க்கலாமா?

என்னிடம்
கொஞ்சம் மிச்சமிருந்தது…
சிந்தனைகள் ஏதுமற்ற நேரம். 


-