நான் ரசித்த…. நந்தலாலா

தாயைத் தேடும் இரு வேறுபட்ட மனம் கொண்ட இருவரின் தேடுதலில் ஆரம்பித்து ஒருவழியாய் தேடுதல் தீரும் போது படமும் நிறைகிறது. படம் அதன் போக்கில் போகிறது, மனம் தான் கனத்துப்போய் திரும்புகிறது.

பள்ளி நுழைவாயிலில் தலையைக் குனிந்து வெறுமையோடு நிற்கும் சிறுவனின் பின்னணியில், பெற்றவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு மற்ற பிள்ளைகள் நகரும் காட்சியில் சிறுவனின் வெறுமையை இசையால் ஊடறுத்து மனதுக்குள் திணிக்கும் காட்சியோடு தொடங்கும் படம், இறுதிக்காட்சி வரை இசையைப் பிசைந்தே மனதிற்குள் ஊட்டுகிறது.

முதற்கண் இப்படியொரு கதையை தமிழ் சமூகத்தில் இயக்கத் துணிந்த இயக்குனருக்கு மனதார வாழ்த்துச் சொல்வோம். படம் முழுதும் தேடித்தேடிப் பார்த்தாலும் இதுவரை திரையில் பார்த்த முகங்களாக இல்லாமல் இருப்பதே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. வெறும் பனிரெண்டு நொடிகள் மட்டும் வரும் நாசரும், குளோசப் முகம் காட்டாத ரோகிணி மட்டுமே இதுவரை பார்த்த முகங்களாய்.


முரட்டுத்தணம், கோழைத்தனம், குழந்தைத்தனம் என பலபரிமாணம் காட்டும் மிஷ்கினை ஒரு விநாடிகூட அந்தப் பாத்திரத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. லேசாய் கறுத்த, மெலிந்த உருவமாய், கொஞ்சம் தூக்கிக்கட்டிய புடவையுமாய் மிகச் சாமனியப் பெண்ணாய் வரும் சாலையோரத்து விபச்சாரி ஸ்னித்தாவும், போட்டோவில் மட்டும் பார்த்த அம்மா தரும் முத்தத்திற்காக, யார் முத்தமிடவ ந்தாலும் கவனமாய் ஒதுங்கிப்போகும் சிறுவன் அஸ்வத்தும் படத்தில் நடிக்காமல் வாழ்ந்ததாகவே மனது உள்வாங்குகிறது.

”பொளிச், பொளிச்”சென்று குளோசப் வைத்து  வெறுப்பேற்றாமல், காட்சிகளை அதன் இயல்பில், அது சில சமயம் கூடுதல் நீளமாய் இருந்தாலும் கூட ரசிக்கும் வகையில், உறுத்தாமல் வைத்தது சிறப்பான ஒன்று. திரையரங்கை விட்டு வெளியேறும் போது வளைந்தோடும் சாலைகள், விரிந்து கிடக்கும் பச்சை என ஈரோடு சேலம் மாவட்டங்களின் கிராமத்துச் சாலைகளின் அழகை அப்படியே கண்களுக்குள் தேக்கி வரலாம். இரண்டு ஊரிலும் அம்மாக்களை தேடும் காட்சியில், பலகாலம் ஓடி, பழகித்திரிந்த நம்மூர் கிராமத்து வீதிகளின் பரிட்சயம், நம்மையும் அவர்களோடு கூடவே ஓடியோடி ஒவ்வொரு வீடாய் தட்டுவதாக உணர்த்துகிறது.

மிஷ்கின் அகியின் அம்மாவைச் சந்திக்கும் காட்சியில், ஒரே ஒரு டாப் ஆங்கிள் காட்சியில், ஒரு கதையை ஒற்றை வசனம் கூட இல்லாமல் நமக்கு புரியவைப்பது இசை மட்டுமே! 


மிஷ்கின் அஸ்வத் இருவரும் பயணித்தினூடாக சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைக் கடக்கும் போது, அவர்களுக்கு பின்னால் புகுத்தப்பட்டிருக்கும் சுவாரசியங்களை மனசு தேட முனைவதைத் தவிர்க்க முடிவதில்லை.

உருவங்களை, முகங்களைக் காட்டி கதையை மனதிற்குள் ஊட்டுவதைவிட்டு, கால்களைக் காட்டி, அதன் மொழியில் பல இடங்களில் காட்சியை நகர்த்திய விதம் ரசிப்புக்குரிய ஒன்று. கிழவன், ஆட்களிடம் அடிவாங்கித் துவண்டு, பின் பைக் நண்பர்கள் வந்த பின், குண்டாய் இருக்கும் ஓட்டுநரின் தோளைப் பற்றிக்கொண்டு மிஷ்கின் துள்ளும் காளையாய் குதிக்கும் காட்சி சான்சே இல்லை! 



படம் முழுதும் குட்டிக்குட்டி வசனங்கள் மட்டுமே. பாலத்துக்கு அடியில் ஸ்னித்தா பேசும் வசனம் ஒன்றே படத்தின் நீளமான வசனம் என்று சொல்லலாம். ”கிழவன், குடிகாரன், சீக்காளி” என்று ஆரம்பிக்கும் அந்த நீள வசனத்தின் முதல் மூன்று வார்த்தைகள் விபசாரிப் பெண்ணின் வலியை மனதிற்குள் திணிப்பதை தவிர்க்க முடியவில்லை.

அகி ”போடா மெண்டல்” என்றபோது கோவத்தோடும், இயலாமையோடும் குதிக்கும் மிஷ்கினும், ”இவங்களையாவது (ஸ்னித்தா) அம்மான்னு சொல்லியிருக்கலாம்ல, முத்தம் கொடுத்திருப்பேன்ல” எனக்கதறும் அஸ்வத்தும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.

தழுவப்பட்ட கதையாக புகார் இருந்தாலும், இந்தக் கதையை மிக அழகாய் இழைத்து தமிழில் தந்த துணிச்சலுக்கு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டியே தீரவேண்டும்.



படத்தில் குறைகளே இல்லையென்று சொல்லமுடியாது, ஆனாலும் மனதிற்கு மிக நெருக்கமாய், காட்சிக்கு காட்சி மனதிற்குள் அடுக்கடுக்காய் படியும் விதமாய் படம் அமைந்திருப்பதில் குறைகளை மனதே புறந்தள்ளி, சிறப்பை மட்டுமே நினைக்க பேசவைக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

திறந்த மனதோடு படம் பார்க்கச் சென்றால், மனம் நிறைய கனமாய், நாம் அதிகம் பழக்கப்படாத மனிதர்களின் பக்கங்களை மனதில் சேமித்து வந்து, அசைபோட்டுக் கொண்டிருக்கலாம்.

கட்டாயம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம்

0000000000000000000
திரையரங்கில் சென்று படம் பார்க்கும் வழக்கமற்ற ஒரு பதிவரை வற்புறுத்தி அழைத்துப் போனேன். படம் பார்த்துவிட்டு இந்தப் பாரத்தை இறக்கி வைக்க சில நாள் ஆகும் என்றார்.

மதிய காட்சிக்கு ஈரோடு ஆனூர் திரையரங்கில் மொத்தம் 50 பேர் கூட இல்லை. இரண்டே இரண்டு பெண்கள் மட்டும். அதில் ஒன்று காதல் ஜோடி போல் தெரிந்தது

படம் ஆரம்பித்த சிறிது நேரம் வரை படம், மிஷ்கின் பாத்திரம் குறித்து கிண்டலடித்துக் கொண்டிருந்த பின்வரிசை இளைஞர் குழு, நேரம் கடக்க கடக்க கனத்த மௌனத்தோடு துளியும் சத்தமின்றி அமைதியாய் படம் பார்த்தனர்.

ஃபேஸ் புக்கில் என்னுடைய் திரிக்கு ”நானும் கௌதமச் சித்தார்த்தனும் வருகிறோம்” எனச் சொன்ன காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதியும்,  ”உடனே பாருங்கள்.. தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படைப்பு...” எனச் சொன்ன ”அவள் பெயர் தமிழரசி” இயக்குனர் மீரா கதிரவனும் படம் பார்க்கும் ஆவலை வெகுவாக தூண்டியவர்கள்.

வருடத்திற்கு ஐந்து படம்கூட திரையரங்கு சென்று பார்க்காத என்னை, படம் வெளியாகி அடுத்த நாளே பரபரப்பாய் படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே!.
000000000000000

கனக்கும் அன்பு – இலங்கைப் பயணம்


வெறும் நான்கு நாட்கள் அவகாசத்தில் இலங்கை சுற்றுலா செல்ல ஒரு நிறுவனத்தின் மூலம் நண்பர் சார்பில் அந்த வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் எங்கே என்றதற்கு, மூன்று நாளும் கொழும்புதான் என்று அறிய வர, நான் மட்டும் யாழ்ப்பாணம் வரை சென்று வர அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே என நினைத்தேன். ஆனால் தனியாக, எப்படி அந்த நாட்டின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வது என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.

அதுநாள்வரை இலங்கையிலிருந்து என்னோடு, அதுவும் எப்போதாவது மின் அரட்டையில் உரையாடும் ஒரே பதிவர் சிதறல்கள் றமேஸ் மட்டுமே. றமேஸிடம் முதலில் கொழும்பு வருவதாகவும், அங்கிருந்து யாழ்ப்பாணம் வரை சென்று வர விருப்பம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என அரட்டையில் கேட்க, உடனே கைபேசிக்கு அழைத்தார். தான், கொழும்பில் இல்லையென்றும், அங்கிருக்கும் சக பதிவர் நண்பர் நா மதுவதனனை அழைக்கச் சொல்வதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் மதுவதனன் அழைக்க இலங்கை நட்பின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது. மது பதிவர் லோஷன் அவர்களோடு பேசி பயண விபரம் குறித்து திட்டமிடுவதாகச் சொல்ல, அதையொட்டி பதிவர்கள் மதுவதனன், லோஷன், தமிழ்நதி ஆகியோருக்கு கொழும்பு வந்தடையும் நாள் மற்றும் திரும்பும் நாள் ஆகியவற்றைக் குறித்து மின் மடலிட்டு பயணத்திட்டத்தை வகுத்துத்தர வேண்டினேன். அடுத்த சில மணி நேரத்தில் கனடாவில் இருக்கும் பதிவர் தமிழ்நதி, வவுனியாவில் இருக்கும் தனது சகோதரி மகன் செந்தூரனை என்னிடம் தொடர்பு கொள்வார் என மடலிட்டார். சில மணி நேரத்தில் செந்தூரன் அழைத்து, கொழும்பு வந்த பின் தொடர்பு கொண்டு விட்டு வவுனியா வந்துவிடச் சொன்னார். அடுத்தடுத்த நாட்களில் மது, லோஷன், தமிழ்நதி என மின்னஞ்சல்களிலேயே பயணத் திட்டம் ஒரு மாதிரியாக வகுக்கப்பட்டது.

ஒருமாதிரி புரிந்தும் புரியாத திட்டங்களோடு அக்டோபர் 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொழும்புவில் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியை அடைந்தேன். என்னோடு வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருக்கும் நான் தனித்து வெளியில் செல்வது பற்றித் தெரிவிக்கக்கூட இல்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை ஏழு மணிக்கு அதிர்ந்த கைபேசி எழுப்பிய போது அது மதுவாகத்தான் இருக்கும் என உணர முடிந்தது. அடுத்த சில நிமிடங்களில்  மெலிந்த, சிவந்த, சுறுசுறுப்பான மதுவின் கைகுலுக்களில் அன்பு நிறைந்த வெப்பத்தை உள்வாங்க முடிந்தது. வேற்று மண்ணில் முதன் முதலாய் முகம் பார்த்திராத ஒரு நட்பின் அன்பை உள்வாங்கும் சுகம் மிக அலாதியான ஒன்று. பேச வாய் திறக்கும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் சிரிப்புதான் சிதறி விழுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உற்சாகமாய் பேசி, உடனிருந்து, வவுனியாவில் இருக்கும் செந்தூரனோடு பேசி, தெளிவான ஒரு பயணத் திட்டத்தை திட்டமிட்டார். முன்னரே இலங்கையில் பயன்படுத்த ஒரு தற்காலிக கைபேசி இணைப்பு கேட்டிருந்ததையொட்டி, தன்னுடைய கைபேசி இணைப்பு ஒன்றினை என்னிடம் கொடுத்து விட்டு, பதிவர் லோஷனோடு பேசி அடுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிவிட்டு விடைபெற்றார். 

பதிவர் லோஷன், அவர் நண்பர் விமல்
பதினொரு மணி சுமாருக்கு விடுதி வாசலில் நின்று கொண்டிருக்க, வாகனம் ஒன்று நின்று நிதானித்து, கடந்து விடுதியின் வாகன நிறுத்தப் பகுதிக்குச் சென்றது. ”ஒருவேளை இது லோஷனாக இருக்குமோ” என்று நினைத்தேன், நினைத்தபடியே அது லோஷன் தான். ஊடகத்துறையில் இருப்பதால் பணி நிமித்தம் பரபரப்பாக இருப்பவர் என மது சொல்லிருந்தார். ஆனாலும் எந்த வித பரபரப்பும் காட்டாமல் இடம் தேடி வந்து அழைத்துக் கொள்ள, கொழும்பு நகர வீதி வழியாக கோட்டை பேருந்து நிலையம் நோக்கி பயணப்பட்டோம். செல்லும் வழியில் அவருடைய நண்பர் விமல் அவர்களும் இணைந்து கொண்டார்.

பதிவுலகம் குறித்து, ஈழத்தில் இந்திய அரசியல் குறித்து, கொழும்பு நகரத்தில் இருக்கும் கைபேசி விளம்பரங்களில் அசின் ஆங்காங்கே தென்படுவது குறித்து, அவர் இந்தியா வந்திருந்த பயணம் குறித்து என நிறைய வழி நெடுகப் பேசிக்கொண்டேயிருந்தோம். யாழ்ப்பாணம் செல்ல பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டி, கடவுச்சீட்டின் பிரதியை பெற்றுக் கொண்டு, அனுமதிக் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்புவதாகத் தெரிவித்து விட்டு என்னை மிகப் பத்திரமாக வவுனியா செல்லும் பேருந்தில் ஏற்றி அமர்த்திவிட்டு விடைபெற்றார்.
வவுனியா சென்ற பேருந்து... (நம்ம ஊரு அசோக் லைலேண்ட் பேருந்து)
வவுனியா பேருந்து ஏறியது முதல் செந்தூரன் என்னை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டார். ஏழுமணி நேரப் பயணம், இரவு ஏழு மணிக்குத்தான் வவுனியா சென்றடைவேன் என்றாலும், குறைந்தது 15 முறையாவது அழைத்து நான் எந்த இடத்தில் வருகிறேன் என்பதை தொடர்ச்சியாக கேட்டறிந்து கொண்டேயிருந்தார். முகம் தெரியாத இருட்டு கவிழ்ந்த பொழுதில் சிலுசிலுக்கும் குளிரோடு வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் பேருந்திலிருந்து இறங்கித் திரும்பிய நொடி, சிநேகமாய் கை அசைத்தார் செந்தூரன். முதல் பார்வையிலேயே சிநேகம் கொப்பளித்தது. கை பற்றிப் பயணம் குறித்து கேட்டு புறப்பட எத்தனித்தபோது எங்கே என்று கேட்டேன், வீட்டுக்கு என்றார். 
இளவேனில் - தமிழ்நதி வீடு
நகரத்தின் வீதிகளைக் கடந்து, காற்று சிலுசிலுக்க தமிழ்நதி அவர்களின் இளவேனில் வீட்டிற்கு சென்றடைந்தேன். அந்நிய தேசம், முன்பின் அறியாத அந்நிய மனிதன் என்ற உணர்வு ஏதுமின்றி அன்பு நிறைய அந்த வீட்டின் பிள்ளைகள் என்னை வரவேற்றனர். புதிய ஊர், முன்பின் அறியாதவர்களின் வீடு என்ற உணர்வும் துளியும் இல்லாமல், என்னால் சட்டென அந்த இல்லத்து மனிதர்களோடு மிக இயல்பாக பழக முடிந்ததுவும் ஆச்சர்யமாகவே இருந்தது. 

மரங்கள் சூழ அழகியதொரு வனமாய்
இளவேனில் இல்லம், ஒரு மிக அழகியதொரு பறவைக் கூடு. தமிழ்நதி அவர்களின் சகோதர உறவுகளின் பிள்ளைகள் செந்தூரன், தீபா, சாந்தினி, கோபி என சிறகடிக்கும் அன்புப் பறவைகள். எல்லா வார்த்தைகளிலும், எல்லா நடத்தைகளிலும் அந்தப் பிள்ளைகளிடம் அன்பு கொப்பளித்தது. முதல் நாள் இரவு முழுக்க பயணம், அடுத்து பகல் முழுதும் பயணம் என்று களைத்துக்கிடந்த உடம்பை அந்தப் பிள்ளைகளின் உற்சாகப் பேச்சு மனதை குதூகலிக்கச் செய்து, தொடர் அரட்டையில் நடுநிசி வரை நகர்த்தி உறங்கவிடாமல் உற்சாகமாகவே வைத்திருந்தது. 
தீபாவின் கை வண்ணம்
செந்தூரன் உட்பட அவர்கள் அனைவருமே சில வருடங்கள் சென்னையில் தமிழ்நதியோடு வசித்திருக்கிறார்கள். நிறைய தமிழகத்து எழுத்தாளர்களை, பதிவர்களைச் சந்தித்த அனுபவம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தீபாவிடமிருந்து புத்தகங்கள் குறித்து, சென்னையில் நடந்த சில விழாக்கள் குறித்து, தமிழ்நதி குறித்து, அவர்களின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குறித்தென பேச்சு அருவியாய் விழுந்து கொண்டேயிருந்தது. ஆச்சரியமாய் அவதானித்துக் கொண்டிருக்க மட்டுமே செய்தேன், காரணம் தீபா குறிப்பிட்ட அளவிற்கு எனக்கு பரிச்சயம் இல்லை என்பதுவும் ஒரு காரணம்.

புத்தகம், காஃபி - உபசரிப்பு
”மாமிய (தமிழ்நதி) சென்னையில் கண்டுறீக்கீங்கதானே”? என தீபா கேட்டபோதுதான் இதுவரை தமிழ்நதியிடம் நான் பேசியது கூட இல்லை, சில மாதங்களுக்கு முன் கானல் வரி வாசித்துவிட்டு மின்னஞ்சல் இட்டது, தற்போது இலங்கைப் பயணத்திற்காக மின்னஞ்சல் அனுப்பியதையும் கூறினேன். அங்கு தங்கியிருந்த தினத்தன்று தமிழ்நதி செந்தூரனை கைபேசியில் அழைத்த போதுதான் முதன்முறையாக அவர்களிடம் பேசினேன். நீங்கள் வழக்கமாக சாப்பிடு உணவுகள் வேண்டாம் என, நான்கு வேளைகளும் இலங்கை உணவு வகைகள் என மிகச் சிரத்தையாய் உணவு பரிமாறி, இந்த புத்தகம் வாசிங்க, அந்தப் புத்தகம் வாசிங்க என, ஒவ்வொரு செய்கையிலும் அன்பால் அந்தப் பிள்ளைகள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்கள்.

அடுத்த நாள் மதியம் வரை யாழ்ப்பாணம் பயணத்திற்கு முயன்று அனுமதி கிட்டாததால் மாலை வீட்டிற்கு திரும்பினோம். கொழும்புவிற்கு அன்று இரவே திரும்பலாமா? அல்லது அடுத்த நாள் அதிகாலை புகையிரதத்தில் கிளம்பலாமா என குழப்பத்தோடு யோசித்த நேரத்தில் மது அழைத்தார்.

இரவு கிளம்பி அதிகாலை கொழும்பு அடைவதுதான் சிறப்பு என்று வழிநடத்தத் துவங்கினார். ஆனால் அதே இரவு மது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லப் பயணம் துவங்கினார். நான் வவுனியாவிலிருந்து கொழும்பு கிளம்பினேன். தான் கொழும்பில் இல்லாவிட்டாலும், நான் கொழும்பை வந்தடையும் அதிகாலை நேரத்தில் தனது நண்பர் நிமல்ராஜ் மூலம் கொழும்பில் இறங்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து நான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் நிமல் ராஜ் அழைத்து ”காலை ஐந்து மணி சுமாருக்கு கொழும்பு நகரை அடைவீர்கள், பேருந்திலிருந்து இறங்கும் முன் பத்து நிமிடங்களுக்கு முன்பாக என்னை அழையுங்கள், நான் அழைத்துக்கொள்கிறேன்” என்றார்.
பேருந்து கிளம்பும் போது, என் கைபேசி உரையாடல்களைக் கவனித்த திருகோணமலையைச் சார்ந்த நபர் ”என்ன சார் தமிழ்நாடா” என விசாரித்து, காலை எங்கு இறங்குவது, அந்த நண்பரை எங்கு வரச்சொல்வது என்று வழிநடத்தத் துவங்கினார். காலை கொழும்பை அடைந்து நான் இறங்க வேண்டிய இடத்தில் அவரும் இறங்கிக் கொண்டார். மதுவின் நண்பர் நிமல்ராஜ் வந்து என்னை அழைத்துக் கொள்ளும் வரையில் கூடவே இருந்து அவரோடு அனுப்பிவிட்டுச் சென்றார். நிமல்ராஜ் என்னை அழைத்து விடுதியில் சேர்த்தார்.

கன்கோன் கோபியுடன் நான்!
பயண அலைச்சலை கொஞ்சமாய் விடுதி அறையில் கரைத்துக் கொண்டிருந்த வேளையில், அமைதியாய் அறைக் கதவைத் தட்டி, அன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க வந்தார் கன்கோன் கோபி, எது கேட்டாலும் சிரிப்பு, அதையொட்டி சன்னமான குரலில் ஒரு சின்ன பதில். பதிவுலகில் கிரிக்கெட் சுரங்கம் லோஷன் என்று சொன்னால், கான்கோன் கோபி லோசனின் வாரிசு என்று சொல்லலாம் அப்படியொரு கிரிக்கெட் ஆர்வம். நீண்ட நேரம் எங்கள் கடிகளைத் தாங்கிக் கொண்டிருந்ததை, சில கணங்களில் பார்க்க பாவமாகவும் இருந்தது.

இந்தப் பயணத்தில், சந்திக்க பெரிதும் விருப்பப்பட்ட றமேஸ் கொழும்பு வரும் திட்டத்தில் சில தனிப்பட்ட சிரமங்கள் ஏற்பட, அவரால் வரமுடியாமல் போனது வருத்தமாய்ப் பதிந்தது. மீண்டும் யாழில் அல்லது கொழும்பில் சந்திப்போம் என நினைத்து கை அசைத்துப்போன மது நான் கொழும்பு வந்த நாளில், யாழ்ப்பாணம் சென்றுவிட மதுவையும் மீண்டும் சந்திக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். மூன்று நாட்களாக, இலங்கை இந்தியா எனப் பேசித்தீர்த்து கைபேசி இணைப்பை திருப்பியளிக்கும் போது, எவ்வளவோ வற்புறுத்தினாலும் முதல் சந்திப்பில் பணத்தை முன்னிறுத்தக் கூடாது என மதுவதனன் அதற்கான செலவுகளைப் பெற மறுத்தது மட்டும் சமாதானமாக முடியாததாக இருந்தது.

இரண்டு இரவு, மூன்று பகல் என அழகான, அர்த்தமுள்ள 60 மணி நேரம், இதயத்துக்கு மிக நெருக்கமாய் அமர்ந்து வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத மாதிரி அன்பை சொட்டுச் சொட்டாய் சுரக்கச்செய்த இந்த மனித உள்ளங்களை, நினைக்கும் நேரமெல்லாம் நெஞ்சம் முழுதும் நிறைந்து துள்ளுகிறார்கள்.

அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.

அன்பிற்கு ’நன்றி’ என்ற ஒற்றை வார்த்தை போதுமா என்று தெரியவில்லை, அதையும் தாண்டி அந்த அன்பை சக மனிதர்களிடம் இறக்கிவைப்பதே நியாயமான தீர்வாகவும் இருக்க முடியும்.

சந்திக்கும் வரை சற்றும் நேரிடைப் பரிச்சயம் இல்லாமல், பார்த்த கணத்தில் பாசத்தால் கட்டி இழுக்கும் இந்த நட்புள்ளங்களை நினைத்துப் பார்க்க…. 24.11.2008-ல் பதிவுலகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் கனிணி விசைப்பலகையில் எழுத்துகளைத் தேடி விரல்கள் பாயும் இந்த நேரமே ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

______________________

பகிர்தல் (22.11.2010)


சேமிக்காத மழை: 

எனக்குத் தெரிந்து இந்த ஆண்டுதான் தொடர்ந்து பல நாட்களாக நம் பகுதியில் இவ்வளவு மழை பெய்கிறதென்று நினைக்கிறேன். ஓரேயடியாய் பேய் மழையாய் இல்லாமல் அவகாசம் விட்டு அவ்வப்போது ஆர்பாட்டாம் இல்லாமல் பெய்துவருகிறது. சில பழைய சுற்றுச்சுவர் கட்டிடங்களில் கேரளா போல் பாசி பிடித்திருப்பதைக் காண முடிகிறது.

நகர்புறத்தின் நடுவே இருக்கும் சாக்கடைப் பள்ளங்களில் மழைநீர் கரை புரண்டோடி அக்கம் பக்கம் இருக்கும் குடிசைகளை இழுத்துச் செல்வதை என்றைக்கும் தடுக்க முடியாதது. காரணம், எல்லாக் குப்பைகளையும் சாக்கடைகளில் கொட்டி ஏதோ ஒரு இடத்தில் தேங்க வைப்பதுவும், மழை நீர் சேமிப்பு என்றால் அது எந்தச் சேனலில் வருகிறது என்பது போன்ற அக்கரையின்மையின் வெளிப்பாடே!. காங்கிரீட் காடுகளுக்குள் பெய்யும் மழையை துரத்தியடிப்பதில் இருக்கும் வேட்கை, நிலத்துக்குள் புகுத்தி சேமிக்கும் வள்ளமையை எந்த கண் துடைப்புச் சட்டத்தால் திணித்திட முடியும்!


மூச்சு முட்டும் பேச்சு :

ஒவ்வொரு முறையும் சாலைகளில் செல்லும் போது, கவனிக்கத் தவறாதது, இன்றைக்கு எத்தனை பேர் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். சராசரியாக 1 கி.மீ தூரம் செல்லும் சாலைகளில் எதிரில் வருபவர்கள், பக்கவாட்டில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் எனக் கவனிப்பதில் குறைந்தது 30% பேர் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. பத்து வருடங்களுக்கு முன் பேசியதை விட போன் மூலமாக குறைந்தது பத்து மடங்காவது சராசரியாக பேசுகிறோம் என நினைக்கிறேன். அப்படிப் பேசிப்பேசி என்ன சாதித்தோம் என்பதுதான் தெரியவில்லை. சினுங்கும் போனைப் பார்த்தாலே அயர்ச்சி கூடுகிறது.

இதையும் கொஞ்சம் பாருங்களேன்…

 


நல்ல கேள்வி

எந்த அரசாங்கமும் இதுவரை வாங்காத அளவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம் குட்டு மட்டுமா!?

இன்றைய லேட்டஸ்ட் குட்டு….
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் (கேரளாக்காரர்!!!!) நியமன வழக்கில் நியமனம் குறித்த சீல் வைத்த கவரில் கோப்புகளை அளித்த அட்டர்னி ஜெனரலிடம் கவரைப் பிரிக்காமலே உச்ச நீதிமன்றம் கேட்கிறது ஊழலில் கைதாகி ஜாமின்ல வந்தவரை எப்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையரா போடுறீங்க

இலவச விளம்பரம்:

எங்கள் அரிமா சங்க இதழ் சுவடுகளின் இந்த வருட ஆசிரியர் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. இதுவரை இரண்டு இதழ்கள் வெளிவந்திருக்கிறது. இன்னும் மூன்று இதழ்கள் இருக்கின்றன. சொட்டும் கவிதைகள் பக்கத்தில் பதிவர்களின் கவிதைகளைப் பயன்படுத்தி வருகிறேன். குறுங்கவிதைகள் அனுப்ப விரும்பும் பதிவர்கள் எனக்கு மடலிடவும். ஏற்கனவே வலைப்பூவில் வெளியான கவிதையாக இருந்தாலும் சரி.

சுவடுகள் இதழ்களை வாசிப்பதற்கான சுட்டி சுவடுகள் - ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்

உயிர்களின் விலை :

ஈரோடு நகரத்தின் நான்கு முக்கியச் சாலைகளிலும் அகலமாக தடுப்புச் சுவர் கட்டிவிட்டார்கள். அந்தத் தடுப்புச் சுவர் எதிரெதிராய் வாகனங்கள் வரும், இடது வலது சாலையை பிரிப்பதற்கு என்பதைத் தாண்டி. விளம்பரப் பலகைகளி நடுவதற்கே என்பது போல் அவ்வளவு அகலம். அதுவும் மிக நெருக்கமாக நடப்பட்டிருக்கும் பலகைகளால் எதிர் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல், இடது பக்கச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பும் இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் அவ்வப்போது அடிபட்டு வருவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. விளம்பரப் பலகை மூலம் வரும் காசு பணத்திற்கு முன் உயிரா முக்கியம் ((:

கொஞ்சம் ’கிறிச்’சுகள் (அட...... ட்விட்ஸ்ங்க)

தோல்விகள் துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதையில் எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

000000

நான்காவது ரவுண்டில் சேர்ந்த நண்பன் ராவா ஒரு புல் அடிப்பேன் எனச்சொல்ல, பாதி மப்பு காலி, ஒரு கிங்பிஷர்பீர் என ஆர்டர் செய்தபோது புல் மப்பும் காலி

000000


அரிசி, கோதுமை, பால் எதிலும் நினைச்ச இலக்கை அடைய முடியறதில்ல, தீபாவளிக்கு டாஸ்மாக் சேல்ஸ் 200+ கோடி டார்கெட் சொல்லி அடிக்கிறாங்க # பெருமை


000000


ஊழல் செய்பவர்கள், ஊழலில் அமைதிகாப்பதில்லை. அது குறித்து பேசும் போது ஒட்டுமொத்தமாய் அமைதி காக்கிறார்கள் # வாழ்க பணநாயகம்


000000


பீரையும், ஒயினையும் சேர்த்தா, முறைப்பெண்+மல்லிகைபூ மாதிரி செம காம்பினேசன் போல # பில்டப்பு


000000


இரண்டு திருமணமானவரோடு மாணவிஓட்டம்போலீஸ்வலைவீச்சு’- இன்னும் எத்தனை நாளைக்குத்தான்ஓட்டம்’ ‘வலைவீச்சுனே ஒப்பேத்துவீங்க  #வார்த்தைப் பஞ்சமோ


000000


குதூகலமாய், உற்சாகமாய் பேசவாவது செய்யும் பிரதமர் எப்போதான் கிடைப்பாங்க இந்தியாவுக்கு # பேராசை


000000


இந்தியாவில் உச்ச நீதி மன்றம் என்று ஒன்று இல்லாமல் போயிருக்கக் கூடாதா? # மன்மோகன்சிங்


000000



சின்னக் குழந்தைகள் வீதிகளில் தீபங்களோடு. டிவிக்களிலிருந்து பிய்த்தெடுப்பதற்காக வேணும் இத்தருணங்கள் தொடரட்டும். # கார்த்திகை தீபம்


000000


RADIA னு பேர் வச்சதுக்குப் பதில் RADIO னு பேர் வச்சிருக்கலாம் # Niira Radia Tapes


000000



தூரிகை விரல்













________________________
கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது


________________________

மீனை வரையச் சொன்னேன்
முதலில் தண்ணீரை வரைந்தாள்
பறவையை வரையச் சொன்னேன்
முதலில் வானத்தை வரைந்தாள்
ஏனென்று கேட்டேன்….
தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?