குடும்பம் வீட்ல காத்துக்கிட்டிருக்கு

”அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க” காலையிலிருந்தே யாரைப் பார்த்தாலும் இதே கேள்விதான். ”ஒன்னுமில்லைங்க”னு சொல்லிச் சொல்லி சோர்ந்து போயி ஒரு கட்டத்தில, அவங்க கேட்குமுன்னே நான் யாரைப் பார்த்தாலும் “அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க”னு கேட்க ஆரம்பிச்சுட்டேன்...

கிட்டத்தட்ட எல்லோரும் இன்று இரவுக்கான நிகழ்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றனர். பதின்ம வயதுகளில் புது வருடப் பிறப்பு என்பது ஒரு சந்தோச நிகழ்வாக இருந்தது போல் ஓர் உணர்வு....

இருபது வயதுகளில் இயக்கம், சங்கம் என்று தினவெடுத்து திரிந்த போது ஒவ்வொரு ஆண்டும் சங்கத்திற்கு நிதி சேகரிக்க (சேராதது வேறு சோகம்) புத்தாண்டு இரவுக்கு நிகழ்ச்சி நடத்தி, அடுத்த நாள் முதல்நாள் இரவு நடந்த சில அட்வென்சர் விசயங்களை பேசிச் சிரித்துத் திளைத்து இரண்டு மூன்று நாட்கள் களைப்பாய் திரிவதுண்டு...

அதற்கு பின்னான காலகட்டத்தில் அலைபேசி வந்தபின் குறுந்தகவல்களை அனுப்புவதும் பெறுவதும் புதுவருடக் கொண்டாட்டத்தின் முக்கிய கடமையாக மாறிப்போனது. 364 நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்தவர்கள்கூட இந்த நாளில் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பி உள்ளேன் அய்யா போட்டுவிடுவது சுவாரசியமானது. சில புத்தாண்டுகளுக்கு அதுபோலவே நானும் அனுப்புவதுண்டு.

இப்போது வருடப்பிறப்பு என்பது மற்றுமொரு முதல் தேதி என்ற நிலைக்கு வந்தது போல் உணர்கிறேன், ஒரே வித்தியாசம் தினமும் தேதிக் காகிதத்தை கிழிப்போம், முதல் தேதி மாதம் காட்டும் காகிதத்தைக் கிழிப்போம், ஆனால் இந்த முதல் தேதிக்கு காலண்டரையே மாற்றுகிறோம்.....

அதுக்குப்போயி இத்தனை கொண்டாட்டம் என புத்திசாலித்தனமாக (!!!! ஹ்க்கும்) நினைக்கும் போது, இந்த தினமும் ஒரு முக்கிய வியாபார தினமாக மாறியதில் ஆச்சரியம் இல்லை, இலவசமாக இருக்கும் குறுந்தகவலுக்கு கட்டணம் நிர்ணயிப்பது முதல், சரக்குக்கு கொடுக்கப்படாத சில்லறையை கண்டு கொள்ளாமல் விடுவது வரை எல்லாமே வியாபாரத்தின் முக்கிய தந்திரமாகத் தெரிகிறது.

அதுவும் புதுவருடக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாய் குடித்துத் தீர்க்கப்படும் சரக்குக்கு இதுதான் கணக்கு என்று இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக வருடம் பிறக்கும் பனிரெண்டு மணிக்கு சற்று முன்பும், பின்பும் சீறும் வாகங்களை கட்டுப்படுத்த கஷ்டப்படும் காவல்துறையினரைப் பார்க்க பரிதாபமாகவும் இருக்கும்.

2002 புதுவருடம் என்று நினைக்கிறேன்... வழக்கம்போல் ஈரோட்டில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம் கலகலத்துக் கொண்டிருந்தது, அப்போதெல்லாம் காவல்துறை இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கவில்லை. நள்ளிரவு தாண்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் அடிக்கடி அலற ஆரம்பித்தது. விடிந்ததும்தான் தெரிந்தது, இரவில் குடித்துவிட்டு வேகமாக போய் விழுந்து நொறுங்கியதில், அரசு மருத்துவமனையில் எட்டு பிணங்கள் விழுந்து கிடந்தது. அதுவும் நாலைந்து சாலைகள் மட்டுமே இருக்கும் ஈரோடு மாதிரி சின்ன நகரத்துக்குள் ஒரே இரவில் எட்டு மரணம் என்பது அதிர்ச்சியின் உச்சம். இறந்த அத்தனை பேரும் இருபதுகளில், அந்தந்த குடும்பத்தின் வருங்காலக் நம்பிக்கையா இருந்தவர்கள். உடனே காவல்துறைக் கண்காணிப்பாளர் இரவுகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை மிகக்கடுமையாக ஒடுக்க ஆரம்பித்தார். காலப்போக்கில் கடுமையும் மாறிப்போனது.

அதன்பின் ஒவ்வொரு புத்தாண்டு இரவிலும் சாலைகளின் ஓரத்தில் பத்திரமாக (தள்ளாடாமல் !!!) நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் போது இளசுகளின் ஆட்டமும், சீறிப்பாயும் வாகனங்களும், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து காவல்துறை துரத்தி பிடித்து அடிப்பதும், விபத்தில் சிக்கி ரத்தக்காவு கொடுப்பதும் சலனமில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.



இந்த ஆண்டாவது புத்தாண்டு குடியின் பொருட்டு விபத்தோ, பிரச்சனையோ நடக்காமல் இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி கொள்வோம். குடியை சிலாகித்து கொண்டாடுபவர்களிடம் சொல்ல விரும்பது... கொஞ்சம் கவனமாக இருங்கள், குடும்பம் வீட்ல காத்துக்கிட்டிருக்கு...

மற்றபடி புதிய 2010 காலண்டரை சுவற்றில் மாட்டிட காத்திருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
_______________________________________________

ஒரு பயணமும், பெரிய பாடமும்

இரவுப் பயணங்கள் ஒரு போதும் எனக்கு சலிப்புத் தட்டாதவை. ஆனாலும் சில வருடங்களாக காரில் நீண்ட தூரம் பயணிப்பதை முழுக்கவே தவிர்த்து வந்தேன், அதுவும் இரவுகளில்...

ஆனால் இந்த முறை மனைவி, குழந்தை, தோழி மற்றும் குழந்தை என குடும்பத்தோடு சென்னை சென்று விட்டு, கிளம்பும் போதே மாலையாகி விட்டது.... சரி எப்படியாவது இரவு 11 மணிக்குள் ஈரோடு போய் சேர்ந்துவிடலாம் என்று கொஞ்சம் வேகமாகவே விரட்டினேன்...

உளுந்தூர் பேட்டையில் ஆரம்பித்தது சனி.... சாலை தாறுமாறாக கிழிந்து கிடந்தது... கள்ளக்குறிச்சி தாண்டிய போது பசிக்கிறது என குரல்கள் வர, ஆத்தூரில் இருக்கும் குடும்ப நண்பர் கனகராஜன் ஞாபகம் வந்தது. அவரிடம் பேசி பல மாதங்கள் இருக்கும், நல்ல வேளை பலமுறை போனை மாற்றிய பொழுதும் அவர் எண்ணை எப்படியோ பத்திரமாக வைத்திருந்திருக்கிறேன். அவரை அழைத்து எங்கு சாப்பிட வசதியாக இருக்கும் என கேட்க, தான் இராசிபுரத்தில் இருப்பதாகவும், சாப்பிடுவதற்கு ஆத்தூர்தான் நல்லது எனவும் சொன்னார். சாப்பிட்டுவிட்டு ஒரு வழியாக ஆத்தூரை கடக்கும் போது இரவு 10.30 மணி....

ஆத்தூரிலிருந்து இராசிபுரம், திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லலாம் என நினைத்தேன், காரணம் இரவில் வாகனமே இருக்காது. அதேபோல் வாகனம் எதுவும் எதிரில் வரவில்லை.... சரி என்று வேகத்தைக் கூட்ட, சில கிலோமீட்டர் கடந்திருப்போம், திடீரென கார் தானாக வேகம் குறைந்தது... அடுத்த கனம் நடு சாலையில் அப்படியே உயிர் விட்டது... மனதிற்குள் ‘திக்’கென்றது. ஏழெட்டு முறை திரும்ப திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தும்... ம்ஹூம் ஒன்றும் பலனில்லை... சுற்றிலும் மிகக் கடுமையான இருள். கண்ணிற்கெட்டிய தூரம் வரையில் வெளிச்சம் இல்லை.
காரில் இருந்த அனைவர் முகத்திலும் மிகப்பெரிய அதிர்ச்சி... கலக்கத்தோடு கதவை திறக்கும் போது, மனதில் இருக்கும் நம்பிக்கை முழுதும் இருள் அப்பிக்கிடந்தது. இரண்டு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.... ஒரு லாரி கடந்து போனது... உடனே நண்பர் கனகராஜனுக்கு அழைத்தேன்... நல்ல தூக்கத்தில் இருந்தார். ”கார் நின்னுடுச்சுங்க... ஆத்தூர்ல இருந்து ஐந்தாறு கிலோமீட்டர்ல இருக்கேன்... ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணி அனுப்புங்க, ஆத்தூர்ல தங்கிட்டு காலையில கிளம்பிக்கிறோம்” என்றேன். ”மாப்ள பத்தே நிமிசத்துல யாரையாவது அங்க வரச்சொல்றேன்.... ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் இருந்தா என்ன செய்வேனோ அதைவிட அதிகமா அக்கறை எடுத்துக்குற ஆள அனுப்பறேன்” தூக்கத்திலும் மிகத் தெளிவாகச் சொன்னார்...

சுற்றிலும் கடும் இருட்டு.. இடது பக்கம் நெல் வயல், வலது பக்கம் குச்சிக் கிழங்கு காடு அடர்த்தியாகத் தெரிந்தது. எல்லோரையும் காருக்குள்ளேயே ஒடுங்கி கிடந்தார்கள். மீளாத அதிர்ச்சியோடு நின்றுகொண்டிருக்கும் போது எதிரில் லாரி ஒன்று வரவும், அதற்கு இடம் விட்டு எங்களுக்கு பின்பக்கமாக வந்தகார் சற்று ஒதுங்கி நின்று மெதுவாக எங்களைக் கடக்கும் போது, எங்கள் கார் பானெட் திறந்திருப்பதைப் பார்த்து ”என்னாச்சு” என ஒருவர் கேட்க, பிரேக்டவுன் என்று சொல்ல.... அந்த கார் சுமார் இருபதடி தூரம் தள்ளிநின்றது....

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த காரில் யாராவது பெண்கள் இருந்தால் பரவாயில்லையே என மனம் நினைக்க, அந்த காரிலிருந்து நான்கு ஆண்கள் இறங்கினர். இருவர் அங்கேயே நிற்க, இருவர் மட்டும் காரை நோக்கி வருவது அந்தக் காரின் பின்பக்க விளக்கொளியில் தெரிந்தது...

பக்கத்தில் நெருங்கி என்ன பிரச்சனை என்று கேட்க... வந்து கொண்டிருக்கும் போது கார் நின்று விட்டதாகச் சொன்னேன், அதில் ஒருவர் காரின் சாவியைக் கொடுங்கள் நான் முயற்சிக்கிறேன் எனக் கேட்ட போது அடர்த்தியான மது வாசனை அவரிடமிருந்து அடித்தது.

குழப்பம், பயம், அவநம்பிக்கை, கையறு நிலை என எல்லாவற்றையும் அந்த இரவும், இருட்டும் என்மேல் சுமத்தியது...

”இல்லீங்க பராவாயில்லை... ஆத்தூர்ல சொல்லியிருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்கனு சொல்ல”

சாவியக் கொடுங்க நான் முயற்சிக்கிறேன் என வற்புறுத்தி கேட்க, ஒரு கட்டத்தில் வழியில்லாமல் கொடுத்தேன்...சட்டென ஓட்டுனர் இருக்கையில் அமர, இடது பக்கம் அமர்ந்திருந்த என் மனைவி பயத்தில் சட்டென இடது பக்க கதவை திறந்து இறங்க முயற்சிக்க... ”மேடம்... ஸாரி மேடம்... பயப்படாதீங்க, ஜஸ்ட் டிரை பண்ணிப் பார்க்கிறேன்” என்று கூறி நான்கைந்து முறை முயற்சித்து வண்டி இயங்கவில்லை...

எங்கே போறிங்கனு கேட்க, ஈரோடு என்று சொல்ல, அட நாங்களும் ஈரோடுதானு சொன்னார்.... என்ன சொல்லியும் அந்த பாழாய்ப்போன இருட்டு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை...

அதற்குள் ஒரு அழைப்பு என் போனுக்கு வர.... ”நான் ராஜன் பாபுங்க, கனகராஜ் பிரண்ட், அங்கேதான் வந்துக்கிட்டிருக்கேன், 10 நிமிசத்துல வந்துடுவேன்” என்று சொல்ல அடி மனதில் லேசான நிம்மதி படர்ந்தது.

அடுத்து ஈரோடில் தன் நண்பர் பெயர் சொல்லித் தெரியுமா எனக் கேட்க, அவர் எனக்கும் நண்பர் என்றேன். உடனே இருங்க போன் பண்ணி பேசலாம் என்று தன் போனில் இருந்து அழைத்து, அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பி என்னிடம் போனைக் கொடுக்க, நம்பிக்கை சுகமாய் பிறக்க கொஞ்சம் வெட்கத்தில் நெளிந்தேன்...

அடுத்த சில நிமிடங்களில் திரு.ராஜன் பாபு அவர்கள் வந்து சேர, முழுத் தெம்பும் வந்தது... குடும்பத்தினரை அவருடைய காருக்கு மாற்றி விட்டு, மீண்டும் சில முயற்சிகள் செய்து, பல மீட்டர் தூரம் தள்ளிவிட்டுப்பார்த்தும் கூட ஒன்றும் நடக்கவில்லை....

இதுவரை சுகமாக பயணத்திற்கு உதவியாக இருந்த கார் இப்போது சுமையாகத் தெரிந்தது. காரை எங்காவது பத்திரப்படுத்த வேண்டும் என்பது அடுத்த வேலையானது, ஒருவழியாக... கொஞ்சம் தள்ளியிருந்த வீடு வரை காரை தள்ளிவந்து நிறுத்தி, அந்த வீட்டுக்காரரை எழுப்பி விபரம் சொல்லிவிட்டு...

அதன் பின்னரே அந்த ஈரோடு நண்பர்கள்(!!!) கிளம்ப, திரு. ராஜன் பாபு எங்களை அழைத்துக்கொண்டு ஒரு நல்ல விடுதிக்கு சென்று அறை எடுக்கும் வரை உடன் இருந்து, பணம் தேவைப்படாதுங்க, கையில் இருக்கிறது என்று சொல்லியும் கூடுதல் பாதுகாப்புக்காக இருக்கட்டும் என என் கையில் இரண்டாயிரம் ரூபாயைத் திணித்து விட்டு, அப்புறமாக கொடுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

காலை 7 மணிக்கு அனுபவம் வாய்ந்த ஒரு மெக்கானிக்கொடு வந்து என்னை அழைத்துச்சென்று வெறும் 10 நிமிடங்களில் காரை சரி செய்துகொடுக்க மனசு முழுதும் நன்றிகளோடு விடைபெற்றேன்..

மனதில் அறைந்த சில உண்மைகள்...
* இரவில் தனி ஒரு காரில் குடும்பத்தோடு செல்வது மிக மிக மோசமான முட்டாள்தனம்.

* பயணிக்கும் வழியில் நண்பர்கள் இருந்தால் அவர்களின் தொடர்பு எண்களை கட்டாயம் வைத்திருப்பது நலம்....

* இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது, ஏனெனில் நண்பர் கனகராஜ் மாம்ஸ் அப்படி செய்திருந்தால் எங்கள் நிலைமை மிக மோசமனாதாக இருந்திருக்கும். (வேறு யாரையாவது முயற்சி செய்திருக்கலாம், ஆனால் இவ்வளவு விரைவாக உதவி கிடைக்க வாய்ப்பு குறைவு)

* மனிதர்களில் இன்னும் உதவும் குணம் நிறையப் பேருக்கு இருக்கிறது என்பதை, நாங்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்லும் வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உடனிருந்த போது நிரூபித்தார்கள். உதவிசெய்ய வந்தவர்கள் மேல் கொண்ட அபரிதமான பயம் மற்றும் அவநம்பிக்கைக்கு மானசீகமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.

* உதவி வேண்டும் என உறக்கத்தில் இருந்தவரை அழைத்த போது, சட்டென தன் நண்பரை உரிமையோடு அனுப்பிய பாசமிகு கனகராஜ், தன் நண்பர் சொன்னார் என்பதற்காக 11 மணிக்கு மேல், உடனே கிளம்பி வந்து, (பேசியதிலிருந்து அடுத்த 10வது நிமிடத்தில்) பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தயங்காமல் பணம் கொடுத்து, காலையில் காரை சரிசெய்ய உதவி செய்த திரு. ராஜன் பாபு அவர்களுக்கு எந்த வார்த்தைகளில் நன்றி சொல்வது... இதுபோல் சிக்கலில் யாராவது உதவிக்கு அழைத்தால், இனி எக்காரணத்தைக் கொண்டும் முகம் சுழிக்கக்கூடாது என்பதை பாடமாக ஏற்றுக்கொள்கிறேன்.

மிக இக்கட்டான சூழலில் இருக்கும் போது எதிர்பாராத திசைகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க கைகள் நீளும் போது, அந்த கைகளை பிடிக்க படபடப்பதும், மீண்டு வந்ததும் நிம்மதியில், மகிழ்ச்சியில் உணர்வுகளோடு போராடுவதையும் வடிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.

சூழ்நிலைகளின் பொருட்டு, சமூகம் திணித்ததின் பொருட்டு, எத்தனையோ அவ நம்பிக்கைகள் சூழ்ந்து கிடந்த மனதில், இந்த சம்பவம் மிகப் பெரிய நம்பிக்கையை முன்பின் அறிந்திடதா, முகம் கூட பார்த்திடாத நண்பர்கள் மூலம் அளித்திருக்கிறது... மிகப் பெரிய நம்பிக்கை விதை ஆழ மனதில் வேரூன்றுகிறது.
_____________________________________________

தீர்க்க முடியாத தூரத்தில்


காற்றுகூட கசியாத இறுக்கத்தில்
மனங்கள் முயங்கிக்கிடந்தாலும்
வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்
கூடவே விதியும் பிரித்துப்போட்ட
பூளோகத்தின் பிடியில் நீயும் நானும்
தீர்க்க முடியாத தூரத்தில்...

சப்தங்கள் அமிழ்ந்துகிடக்கும்
பின்னிரவில் சப்தம் போட்டு
எழுப்பிவிடும் மனதோடு தேடுகிறேன்
இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை...

மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்
கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...

நன்றி! நன்றி!! நன்றி!!!


என்றோ மனதில் தோன்றிய ஒரு சிறு கனவு
இன்று மிகப் பிரமாண்டமாய் நிகழ்ந்தேறியது...

மிகுந்த நெகிழ்ச்சியோடு, மனதில் பொங்கும் நன்றியோடு, நீண்ட நாள் கனவு கண்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம் வெற்றிகரமாய்.

சுமார் அறுபது பதிவர்கள், பத்து வாசகர்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட நண்பர்களோடு மாலை மிகச்சரியாக நான்கு மணிக்கு மிகச்சுவையான, சூடான தேநீரோடு ஆரம்பித்த சங்கமம் துல்லியமாக ஏழு மணிக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவடைந்தது.

இனிய நண்பர் ஆரூரன் தலைமை தாங்க, புலவர் முனைவர். இராசு மற்றும் தமிழ்மணம் காசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள...

பதிவர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசு ஆகியோர் தனிப்பட்ட தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள...

பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட...

பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோரால் மிகச் சிறப்பாக கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட...

மிகச்சரியாக கூட்டம் ஏழு மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

சங்மத்திற்கான அனைத்து செலவுகளையும் ஈரோடு சார் பதிவுலக நண்பர்கள் ஆரூரன், சண்முகராஜன் , ஈரோடு கதிர், கார்த்திக், நந்து, லவ்டேல்மேடி, தங்கமணி, அப்பன், தாமோதர் சந்துரு, க.பாலாசி, பட்டிக்காட்டான், அகல்விளக்கு, பீம்பாய், இரா.வசந்த்குமார், கோடீஸ்வரன், வால்பையன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்ந்து மூன்று மணி நேரம், அனைவரையும் அரங்கினுள் அமர்த்தி, மிக நேர்த்தியாக நடத்திய ஆரூரன் அவர்களே சங்மத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக பதிவர்கள் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு செய்த பணிகள் மறக்க முடியாதவை.

மூத்த பதிவர்களான கார்த்திக், நந்து மிக ஆதரவாக, இணக்கமாக குறிப்பாக மிகுந்த மனோதைரியத்தை அளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியை வெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ் ஆகியோருக்கு நன்றிகள்.


கடந்த பல நாட்களாக அமெரிக்காவில் இருந்து என்னைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வழிநடத்திய கொங்கு வாசல் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி.

இருக்கும் திசைதோறும் தென்றலாய் வீசிய பதிர்வர்களின் வருகை இந்த சங்மத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை...

அந்த மகிழ்ச்சியை வெறும் நன்றி என்ற மூன்று எழுத்தால் என்னால் நிரப்பமுடியவில்லை....

ஒவ்வொருவர் கைபற்றிய போதும், புன்னகைத்த போதும், தோள் அணைத்த போதும் என் உடன் பிறந்த சொந்தமாகவே நினைத்து மனம் நெகிழ்கிறேன்...


இந்த சங்கமம் வெற்றிகரமாக நடந்ததாக யார் கருதினாலும் அதற்கு இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் பங்கு உண்டு.

சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன்.


சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்

சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
__________________________________________

சரக்கும் சைடு டிஷ்சும் பின்னே ஆறு டவுட்டும்

ரவுண்ட் 1:
சாமிக்கு(!!!) மாலை போட்டு சரக்கு கடைக்கு முன்னே வரிசை கட்டி நிற்கும் சாமிகளுக்கு தனி டம்ளர்ளே சரக்கு கொடுக்குறாய்களாமே... குடிக்கிறவனயோ, ஊத்தறவனையோ யாரும் கண்ணக் குத்தமாட்டாய்ங்களா!!!???

ரவுண்ட் 2:
தெளிவா இருக்கிறவங்க யாரும் ’போதையில’ இருக்குறோம்னு சொல்லாத போது, போதையில இருக்கும் போது மட்டும் அடிக்கடி ”ன்ன்ன்...ஞான் ஸ்டெடி’னு தெளிவா சொல்றாய்ங்களே.... லாஜிக் படி இது சரியா?

ரவுண்ட் 3:
கொஞ்சம் போதையேறுனதும், எப்போதோ நடந்த ஒன்று நினைவுக்கு வந்து ஈகோவை தூண்டிவிட, எப்பாடுபட்டாவது போனைப் போட்டு சண்டைய இழுக்குறவரு, சரக்கு மீறிப்போயி சாக்கடையோரம் கிடக்கும் போது மட்டும் தெருநாய் வந்து உச்சா போனாக்கூட “ஈகோ” இல்லாம சமத்துவத்தோட கெடக்க முடியுதே அது எப்புடி!!!!???

ரவுண்ட் 4:
சரக்கு மீறுனதுக்கப்புறம் எட்டுக்கட்டையில் பழைய சினிமா பாட்டும், கேள்விப்படாத சில கெட்டவார்த்தைகளும் சரளமா வருதே... அட அதுவரைக்கும் இந்த திறமையையெல்லாம் (!!!) எங்க ஸ்டாக் வச்சிருப்பாய்ங்க?

ரவுண்ட் 5:
சரக்கு வாங்கிகிட்டு மீதி சில்லறையை வாங்காதப்போ, பிளாஸ்டிக் டம்ளர மூனு ரூபா கொடுத்து வாங்குறப்போ, சோடாவ ரெண்டு மடங்கு வெல கொடுத்து வாங்குறப்போ, சைடு டிஷ்க்கு சிக்கனை நாலு மடங்கு கொடுத்து வாங்குறப்போ இருக்கிற தாரள பிரபு கொள்கை, பிறந்ததிலிருந்தே வந்ததா இல்லை தற்செயலா சரக்கு கடைக்கு மட்டுமா!!!???

சைட் டிஷ்....
பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?
__________________________________________

மீண்டும் மீண்டும்



மழலையின் எழுத்துக்களாக
சிணுங்கிய தூறல்
சட்டென மௌனங்ளை
சுக்குநூறாய் கிழித்தது மழையாய்

வழிந்தோடிய வெள்ளம்
சாலைகளில் படர்ந்து
கிடந்த அழுக்கை கரைத்து
வெளுத்துப் பார்த்தது

தேங்கிய வெள்ளம்
கெட்டித்துப் போன கரைகளை
கொஞ்சமாய் கரைத்து உடைத்து
பெருக்கெடுத்து புதிய தடம் போட்டது

நாறிப்போன சாக்கடை
அடித்துச் செல்லப்பட்டது
நலிந்து போன குளத்தின்
தாகம் தீர்க்கப்பட்டது

கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை



-

_____________________________________________________

நினைவூட்டல் - பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்

ஈரோட்டில் நடைபெறவுள்ள பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. மனதில் என்றும் நிழலாடும் சங்கமமாக அமைந்திட திட்டமிட்டு வருகிறோம். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர்கள் சங்கமத்தை திறம்பட நடத்த ஒன்றிணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது
இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில், பெருந்துறை ரோடு, ஈரோடு)

அரங்கம் நகரத்தின் மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்

நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்

தேநீர் இடைவேளை

பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு

கலந்துரையாடல்



மாலை 07.00 மணி
இரவு உணவு (சைவம் / அசைவம்)

அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். விழா அரங்கு, உபகரணங்கள், உணவுக்கான செலவுகளை சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர் வேறு யாராவது செலவுகளை பகிர்ந்து கொள்ள விழைந்திடின், என் அலைபேசி எண்ணுக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தவும்.

ஒருங்கிணைப்பாளர்கள்
1. ஆரூரன்
2. வால்பையன்
3. ஈரோடு கதிர்

4. க.பாலாசி
5. வசந்த்குமார்
6. அகல்விளக்கு
7. கார்த்திக்

8. கோடீஸ்வரன்
9. நந்து
10. லவ்டேல் மேடி

11 .தங்கமணி

14. முருக.கவி

15. பீம்பாய்

கலந்துகொள்ளும் பதிவர்கள்:

1.பழமைபேசி
2. வலைச்சரம் சீனா
3. செந்தில்வேலன்

4. வானம்பாடி
5. நாகா
6. வெயிலான்
7. பரிசல்காரன்
8. ஈரவெங்காயம்

9. தேவராஜ் விட்டலன்
10. சுமஜ்லா

11. ரம்யா
12. நர்சிம்
13. தண்டோரா
14. பட்டர்பிளை சூர்யா

15. கேபிள் சங்கர்
16. குணசீலன்
17. இளையகவி
18. கும்க்கி
19. கார்த்திகை பாண்டியன்
20. ஸ்ரீதர்
21. முரளிகுமார் பத்மனாபன்
22. அப்பன்

23. அகநாழிகை வாசுதேவன்
24. ஈரோடு வாசி
25. சங்கவி
26. ஜெர்ரி ஈசானந்தா

சிறப்பு அழைப்பாளர்கள்
1. முனைவர். இராசு
2. க.சீ.சிவக்குமார்
3. தமிழ்மணம் காசி

கலந்துகொள்ளும் வாசகர்கள்
1. ஜாபர்
3. பைஜு
4. ராஜாசேதுபதி

(இதில் யாராவது வருவதாக உறுதியளித்து பெயர் விடுபட்டிருந்தால் அது என்னுடைய தவறு, தயவுசெய்து தெரிவிக்கவும். தயவு செய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்)

உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், கலந்து கொள்ளும் பதிவர்கள், வாசகர்கள் தங்கள் வருகையை உடனே உறுதிப்படுத்தவும். தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு...
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

சங்கமம் சிறப்பாக நடைபெற உதவும்
திரட்டிக்கு நன்றிகள் ____________________________________________

கண் தானம்

சமீபத்தில் நான் சந்திக்கும் அல்லது பேசும் நண்பர்களிடம் ஒரு சிறிய மாற்றத்தைக் கண்கூடாக அறியமுடிகிறது. கண் தானத்திற்காக நான் எங்கள் அரிமா சங்கம் மூலம் முயற்சிப்பதை அறிந்து பெரும்பாலான நண்பர்கள் தாங்கள் கண் தானம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மிக மகிழ்ச்சியாக இருந்தாலும் புன்னகையோடு சொல்வேன் “இப்போ ஒன்னும் உங்க கண்ணுக்கு அவசரமில்லை, ஒரு முப்பது நாற்பது வருசம் கழிச்சு எடுத்துக்கலாம், உங்களுக்கு தெரிஞ்சு யாராவது செத்துப்போனால் அவங்க கண்ணை தானமா வாங்கிக்கொடுங்க” என்பேன்.

அவர்களின் விருப்பம் நியாயமாக இருந்தபோதிலும் அதை விட சாத்தியமாக இருப்பது தினம் தினம் நம்மைச் சுற்றியும் நிகழும் மரணங்களில் இருந்து பெறும் கண் தானங்கள்தான்.

நாமாக முன்வந்து நமது கண்களைத் தானமாக கொடுக்க விரும்பினால், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்து, அந்த விபரத்தை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு, கண் வங்கி பற்றிய விபரங்களை நிரந்தரமாக வீட்டில் மற்றவர்கள் கண்ணில் படும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். சில தன்னார்வ அமைப்புகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கண் வங்கியுடன் இணைந்து, தானம் செய்ய விரும்புபவரிடம் கண் தான ஒப்புதல் சான்றிதழை சட்டமிட்டு கொடுக்கின்றனர். இதில் கண் தானத்திற்கான ஒப்புதலும், கண் வங்கியின் விபரங்களும் இருக்கும்

மிக முக்கியமான, சாத்தியமான மற்றொன்று, நமக்குத் தெரிந்து நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் மரணம் நிகழும் போது, இறந்தவர்களின் கண்களை தானமாக கொடுக்க ஊக்குவிப்பது....

மரணம் நிகழ்ந்த வீட்டில் முடிவெடுக்கும் நபரை அணுகி, கண் தானம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, எப்படியாவது அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். இதில் அவர்கள் என்ன சொல்வார்களோ என்று கூச்சப்பட ஒன்றுமேயில்லை. ஒன்று சரி அல்லது இல்லையென்று சொல்வார்கள் அவ்வளவே, வேறு எந்த நஷ்டமும் இல்லவே இல்லை. ஒரு வேளை நாம் கேட்காமல் போனால் நிச்சயம் கண்கள் தானம் செய்ய வாய்ப்பில்லாமல் சில மணி நேரங்களில் அந்த கண்கள் அழிந்து போகலாம், ஒருவேளை நாம் கேட்டதால் அவர்கள் ஒப்புக்கொண்டால் கண்கள் தானமாக பெற்று அதன் மூலம் இரண்டு நபர்களுக்கு பார்வையளிக்க முடியும்.

கண்களை தானம் அளிக்க அந்த குடும்பம் ஒப்புக்கொண்டால், உடனடியாக அருகில் உள்ள கண் வங்கி அல்லது அரிமா சங்க (லயன்ஸ் கிளப்) அல்லது ஏதாவது ஒரு சேவைச் சங்க உறுப்பினர்களை அணுகினால் அவர்கள் நிச்சயம் கண்களை தானமாக எடுத்துச் சென்று விடுவர்.

கண்களை எடுத்து இன்னொரு நபருக்கு பொருத்துவது என்பது முழுக்கண்களையும் பொருத்துவதில்லை. கண்ணில் இருக்கும் விழித்திரை (Cornea) மட்டுமே எடுத்துப் பொருத்தப் படுகிறது. இதுபோல் பார்வையில்லாமல் விழித்திரை வேண்டி காத்திருப்போர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 840000 பேர் இருக்கிறார்கள். ஆனால், கண் தானம் மூலம் அவர்கள் தேவையை வெறும் பத்து சதவிகிதமே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்சமயம் ஒருவரிடமிருந்து இருந்து எடுக்கப்படும் இரண்டு கண்கள், இரண்டு பார்வையற்ற நபர்களுக்குப் பொருத்தப்படுகிறது.

யார் யார் கண் தானம் செய்யலாம்?
கண் தானம் செய்ய வயது வரம்பு தடையில்லை. எந்த வயதானாலும் எடுக்கலாம்.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோரின் கண்களை தானமாக எடுக்கலாம்.

கண்களை இறந்த 6 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும்.

இறந்த பின் கண்கள் மேல் ஈரமான பஞ்சு அல்லது துணியால் மூடி வைக்கவும், இறந்தவர் உடலுக்கு மேலாக காற்றாடி (ஃபேன்) ஓடாமல் பார்த்துக்கொள்ளவும்.

கண்களை எடுக்க பத்து நிமிடங்கள்தான் தேவைப்படும்.

கண்களை எடுத்த பின் முகத்தில் எந்த மாறுபாடும் தெரியாது.


யார் கண்களை எடுக்க முடியாது?
விஷக்கடி, விஷம், புற்றுநோய், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் நோயால் இறந்தவர்கள் கண்களை மட்டும் தானமாகப் பெறுவதில்லை.

யாரோ ஆங்காங்கே செய்யும் தியாகங்களில்தான் உலகம் வளம்பெறுகிறது...
மரணம் என்பது தவிர்க்க முடியாது, எனினும் ஒரு மரணம் இரண்டு பார்வையற்ற நபர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறது அந்த ஒளியேற்றும் புண்ணிய காரியம் நம் கைகளில் மட்டுமே உள்ளது.
இனியொரு மரணம் நிகழுமாயின், கண் தானம் நம் முன் பிரதானமாய் நிற்கட்டும்.
______________________________________________

தள்ளிப்போடாதே!


வாழ்க்கையில் மிகப் பிடித்தமான விசயம், செய்ய வேண்டிய காரியத்தை இன்னும் சற்றுத் தள்ளிப்போடுவது. தள்ளிப்போடுவதற்கான காரணம் பெரும்பாலும் அல்பத்தனமாகவே இருக்கும். அந்த அல்பத்தனமான காரணத்தில் மிக முக்கியமானது அந்த காரியத்தின் மேல் காதல் இருக்காது.

காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் காரணங்களை தேடித் தேடி சொல்லிக் கொண்டேயிருப்போம். அடுத்து எப்படியாவது அந்த வேலையை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலில் பின்னால் தள்ளிப்போடுவோம். இதில் மிக முக்கியமான கொடுமை அப்படித் தள்ளிப் போடப்பட்ட காரியம் மனதில் சுமையாய் குடியேறிவிடும். அந்தச் சுமை மிகப்பெரிய பாரமாக மாறி பரவலான ஒரு அழுத்தத்தை கொடுக்கும். அது படிப்படியாக செய்ய வேண்டிய மற்ற காரியங்களில் இருக்கும் ஈடுபாட்டையும் சிதைக்கத் தொடங்கும்.

இங்குதான் வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதாய் புலப்படுகிறது. ஒரு காரியத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற நிலையில், வெற்றியாளன் தனக்கு பிடிக்காத வேலையை முதலில் எப்படியாவது செய்து முடித்துத் தூக்கிப் போடுகிறான், தோல்வியாளன் தனக்கு பிடிக்காத வேலையை மிக எளிதாகத் தள்ளிப்போடுகிறான்.

செய்ய விருப்பமில்லாமல் தள்ளிப்போட்ட காரியத்தை, இன்னும் கொஞ்ச காலம் வேண்டுமானால் தள்ளி போடலாமே ஒழிய, எக்காரணத்தைக் கொண்டும் முற்றிலும் தவிர்க்க முடியாது. அப்படித் தவிர்க்க முடியாமல், கடைசியாக ஒரு கட்டத்தில் பல மனப்போராட்டங்களுக்குப் பின் வேறு வழியில்லாமல் செய்து முடிக்கும் போது, பல நேரங்களில் ”அட இவ்வளவுதானா?” என்று வியக்கும் வண்ணம் அது மிக எளிமையான காரியமாகவும்கூட இருக்கும். சில நேரங்களில் தள்ளிப்போட்டதின் விளைவாக, மிக மோசமான பின்விளைவுகள் கூட ஏற்பட்டிருக்கும்.

பிரெய்ன் ட்ரெகியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. காலை எழுந்தவுடன் சில தவளைகளை சாப்பிடவேண்டிய கட்டாயம் இருந்தால், தோல்வியாளன் செய்வது தவளையை கையில் வைத்துக்கொண்டு, ”அய்யோ... சாப்பிடனுமா? எப்படிச் சாப்பிடுறது!?” என்று புலம்பிக் கொண்டிருப்பது. ஆனால் வெற்றியாளன் செய்வது தனக்கு ஒதுக்கப்பட்ட தவளைகளில் மிக அசிங்கமாக இருக்கும் தவளையை முதலில் சாப்பிட்டு விடுவது.
----------------------------------------------------------------------------------

எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

வாழ்க்கையில் ஒன்றை இழந்தால், பெரும்பாலும் அதீத முயற்சி எடுத்தால், ஏதோ ஒரு கட்டத்தில் அதற்கு நிகராக இன்னொன்றைக் கொண்டு நிரப்பிட முடியும். உறவுகளின் பிரிவையும், குடும்பத்தில் நிகழும் சில அகால மரணத்தையும் மட்டும் எதைக் கொண்டும் ஈடு செய்யமுடிவதில்லை

சின்னச் சின்ன சந்தோஷங்களாக மெல்லிய சாரலாக, சில சமயம் ஆலங்கட்டி மழை போல மகிழ்ச்சி நம் மீது விழுந்து வாழ்க்கையை ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கும். ஆனால், துக்கம் என்பது எவ்வளவு சந்தோசச் சாரல் நம்மீது வீசிக்கொண்டிருந்தாலும், ஒரு கரிய நாளின் கனத்த பொழுதுதில் சட்டென வந்து, நம் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்கள் மீதும் பரந்து படர்ந்து படியும். அதன் பின் அந்த வெம்மை மட்டும் தினம் தினம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட துக்கம் ஏற்படுத்திய பள்ளத்தை எது கொண்டும் நிரப்ப முடியாமல், இன்னும் எத்தனையோ குடும்பம் நாட்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

தாய் மீது கட்டிப் புரண்டு விளையாடும் நாய்க்குட்டி போல், காட்டுக்குள் தனக்கென பாதை வகுத்துக் கொண்ட சிற்றோடை போல் மகிழ்ச்சியாக கடந்து போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் குடும்பத்தில் இருக்கும் சக உறவின் எதிர்பாராத மரணம்... பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்தோசங்களையும் சின்னாபின்னமாக்கி விடும்.

அந்த மரணத்தைச் சந்திக்கும் நபர், பாசமிகு தந்தையாக, காதலனாக, கணவனாக, காதலியாக, மனைவியாக, சகோதரனாக, சகோதரியாக, இளம் வயது மகனாக, மகளாக, பூப்போன்ற குழந்தையாக..... இப்படி ஏதோ ஒரு அன்பான உறவாக, இனிமேல் கிடைக்காத பொக்கிசமாக, ஆனால் என்றுமே இழக்க விரும்பாத உறவாக இருப்பார்.

சட்டென துண்டிக்கப்படும் மின்சாரம் போல், திடீரென சொல்லாமல் கொள்ளாமல், அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு காரணத்தால் மரணத்திடம் காவு கொடுக்கும் போது... அந்த குடும்பத்தின் அத்தனை சந்தோசங்களும் அந்த உறவோடு அடக்கம் செய்யப்படும்.

மரணத்தை சந்தித்த கொடுங்காலத்தில், அன்பிற்குரிய உறவை இழந்த அந்த கரிய தினத்தில் காலம் மிக வேகமாக கடந்து ஒவ்வொன்றையும் அதன் போக்கில் நகர்த்தி நடக்க வேண்டிய காரியங்களை நடத்தி விட்டுப் போய்விடும். அதன் பின் வரும் ஒவ்வொரு நாட்களின் இரவுகளும் மிக மோசமான இருளைச் சுமந்து வரும். இழப்பைத் தாங்க முடியாமல், இரவுகளில் தூக்கம் தொலைத்து, வெறுமை சுமக்கும் விடியலை நோக்கி... அப்பப்பா... அதுதான் நிஜமான நரகம். அனுபவித்தவர்களுக்கு வலி தெரியும்.

அதன்பின் அந்த குடும்பத்தில் சின்னச் சின்னதாய் சந்தோசப் பூக்கள், வேவ்வேறு கணங்களில் பூத்தாலும் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல், அடி மனது கனத்தே கிடக்கும். மற்றவர்களிடம் பேசும் போது இழந்தவர்கள் பற்றிய எண்ணம் மீண்டு வரும் போதும், இழந்தவர்களின் பிறந்த நாள் வரும்போதும், இழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும்போது மனம் படும்பாடு, அடையும் வலி... எந்த வார்த்தை கொண்டு எழுத முடியும்.

எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை புதிய உறவுகளைச் சந்தித்தாலும், எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

________________________________________________________

பதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - ஈரோடு

ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில சமயம் பேச்சிலும், மின் உரையாடலிலும் மட்டுமே சந்திக்க முடிகிறது

இதோ...
ஒரு வாய்ப்பு கைகூடி வருகிறது... ஒருவருக்கொருவர் கரம் குலுக்கி, விழிகளை உற்று நோக்கி, “அட நீங்களா அவரு” என ஆச்சரியங்களைச் சுமக்க...

நீண்ட நாளாய் மனதில் மிதந்த கனவு. பல தளங்களில் மிக அற்புதமாக தங்கள் எண்ணங்களைப் படைத்து வரும் படைப்பாளிகளைச் சந்தித்து உரையாட...

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்ற எண்ணத்தை போன பகிர்தலில் வெளிப்படுத்தியதையொட்டி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் பதிவர்கள் தங்கள் விடுமுறையை இதற்கு ஏற்ப மாற்றியமைத்து கலந்து கொள்வதாக மின் உரையாடலில் கூறியது பெருமகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.



20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

சந்திப்பு நடைபெறும் இடம் :

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)

லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

பெருந்துறை சாலை,ஈரோடு - 11

தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே எங்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540

ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

இந்த சங்கமத்தில்
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு


அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்


எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
சங்கமம் குறித்த வால்பையனின் இடுகை
சங்கமம் குறித்த ஆரூரனின் இடுகை
சங்கமம் குறித்த பாலாஜி இடுகை
சங்கமம் குறித்த அகல்விளக்கு இடுகை
சங்கமம் குறித்த வசந்த்குமார் இடுகை
சங்கமம் குறித்த தங்கமணி இடுகை

என்னுடைய மின்னஞ்சல் முகவரி: kathir7@gmail.com

_______________________________________________________

உருகுதே..



ல்லாயிரம் பட்டாம்பூச்சி
பறந்து வந்து என்னை அள்ளிச்
அணைத்து மிதக்கச் செய்கிறது
நீ அலைபேசியில் மின்னும் போது

ரம்புகளில் சில சொட்டு
மது ஊடுருவுகிறது நடு நிசியில்
சிணுங்கும் குறுந்தகவலில்
உன் பெயர் சிரிக்கும் போது

ட்டிப் பறித்த எருக்கம் பூவின்
இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்
ஒரு துளி தேனாய் சுவைக்கிறது
மின்னஞ்சல் வார்த்தைகளாய் தழுவுகையில்

றக்கி வைத்த இட்லியில்
கசிந்து வரும் ஆவியாய்
மிதந்து கரைகிறது மனம்
நீ என் பெயர் அழைக்கும் போது

பூந்தோட்டம் கடக்கையில் வீசும்
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பேரெழுதிய பேனா முனை நுகர்கையில்

________________________________________________________

பகிர்தல்... (01.12.09)

சாதனை : (‘சா’விற்கு பதிலாக ‘சோ’ (அ) ‘வே’ போட்டுக்கொள்ளலாம்)
மக்களவையில் இருபது உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டிய கேள்வி நேரத்தில் வெறும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மக்களவையில் கேள்வி கேட்க உறுப்பினர்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

கேள்வி நேரத்தில் அவையில் இருப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு என்ன வேலை? இவர்கள் செய்வது நியாயமா? ............... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்ன கிழிக்க முடியும்.

தகுதி, தரம் பார்த்தா வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்? நம் மதம் அல்லது ஜாதியைச் சார்ந்தவர், அந்த கட்சியின் வேட்பாளர், வாக்குக்கு பணம் கொடுத்தார் என்ற அடிப்படையில் தானே தேர்ந்தெடுத்தோம்... சரி அனுபவிப்போம்!!!

%%%%

ஆச்சரியம்:
சமீபத்தில் அடிக்கடி எங்கள் பகுதியில் சில வீடுகளுக்கான மின்சாரம் ஏதோ காரணத்தால் அடிக்கடி தடை படுகிறது. அது குறித்து மின்சார அலுலகத்தில் தொலைபேசியில் அழைத்தால் ஆச்சரியமாக அவர்களிடமிருந்து இணக்கமான பதில் வருகிறது, அதோடு புகார் செய்ததற்கான புகார் எண் கொடுக்கிறார்கள்... மகிழ்ச்சியான விசயம் சில மணி நேரத்தில் சரி செய்தும் விடுகிறார்கள்.

%%%%

அலட்சியம்:
தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு பதிமூன்று பேர் விபத்தில் பலியாகிறார்கள். பல சமயம் இது வெறும் செய்தியாகவே நம் மனதில் படுகிறது. அதுவே நம் நெருங்கிய உறவில் அல்லது நட்பில் நிகழும் போது மிகப் பெரிய இழப்பாக அதிர்ச்சியாக, வருத்தமாக, இருக்கிறது. விபத்திற்கான மிக முக்கியக் காரணம் விநாடி நேர கவனக்குறைவும், அலட்சியமுமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

%%%%

மகிழ்ச்சி:
முதலில் லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். லவ்டேல் மேடியின் திருமணத்தை ஒட்டி ஈரோட்டில் நிறைய பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு பதிவர்கள் வர வால்பையனின் உற்சாகமான அழைப்பு முக்கியக் காரணம். வால்பையன் பதிர்வர்களின் பலம் பொருந்திய நட்பு பாலம்.

இளவல் பாலாசி அழைத்ததால் பதிவர்கள் தங்கியிருந்த சுப்ரீம் லாட்ஜ்குச் சென்றேன். அகல்விளக்கு ராஜாசிங்கை ஈரோட்டில் இருந்துகொண்டே முதல் முறை சந்திக்கிறேன். மதுரை ஸ்ரீதர் மற்றும் கார்த்திகை பாண்டியன் ஆகியோரை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறேன், வற்றாத அதே மகிழ்ச்சி, அதே புன்னகை இருவரிடமும்.

முதல் முறை சந்தித்தாலும் கும்க்கியுன் நீண்......ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று, அவருடைய வாசிப்புத்தன்மை மிகப் பெரிய அளவில் இருக்கிறது. எழுத்தாளர் வாமு.கோமு வந்திருந்தார். கும்க்கி வாமு.கோமு எழுத்து பற்றி நிறைய பகிர்ந்தார், நான் இன்னும் வாமு.கோமு எழுத்துக்களை வாசித்ததில்லை. வாமு.கோமுவுடன் வந்திருந்த தோழர் பெரியசாமியின் கொங்குத் தமிழ் கேட்க காது குளிர்ந்தது. நானும் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் என்றாலும், அவர் பேசியதில் பெரும்பாலான வார்த்தைகள் என்னிடம் உயிரோடு இல்லையென்பது வெட்ககரமான ஒன்று.

வால்பையன் எழுதியது போல் சில பதிவர்களிடம் “சரக்கு” மகிழ்ச்சி கரை புரண்டோடியது, மகிழ்ச்சியில் விடுதியின் அறைக்கதவை மிக வேகமாக மூடுவதும், சத்தம் போட்டு பேசுவதுமாக இருந்தது கண்டு வால்பையன் பலமுறை அன்பாக கடிந்து கொண்டும், அவர்களாக அடங்கும் வரையில் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில் சரக்கு மனிதர்களைக் குடித்துக் கொண்டிருப்பதை கண்கூடாக அனுபவிக்க வேண்டியிருந்தது மட்டும் நெருடலாக இருந்தது.

கணேஷ்குமார், கார்த்திக், ராஜதுரை, நாமக்கல் சிபி, சக்கரை சுரேஷ், பெர்ணான்டஸ், ராஜமணாளன், செல்வேந்திரன், ஊர்சுற்றி, தமிழரசி, ரம்யா என பதிவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று.

%%%%

பதிவர் சந்திப்பு!!!???
இந்த மாதத்தில் ஒரு ஞாயிறு மாலை ஈரோட்டில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது, ஈரோடு பகுதியில் இருக்கும் பதிவர்கள், வாசிப்பாளர்கள் கருத்துக்களைச் பகிர்ந்து கொள்ளுங்கள் எப்படிச் செய்யலாம் என்று?

___________________________________________________________