உடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....

டிரெய்ன் பிடிக்க அவசர அவசரமாய் காலையில் வீட்டிலிருந்து கிளம்பினேன். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது திருப்பம் தாண்டி முக்கிய சாலையில் இணையும் நான்கு சாலையில் அவசரமாக திரும்பும் போது கவனித்தேன்.... சரியாக திருப்பத்தில் ஒரு இளைஞன் பைக்கில் குறுக்கே நின்று கொண்டிருப்பதை.... சட்டென என் கண்ணில் ஒரு துளி கோபம் கொப்பளித்தது... சட்டென அந்த இளைஞனின் முகத்தை முறைத்து பார்த்தேன்.... அவன் தாடையில் காயத்திற்கு பிளாஸ்டர் ஒட்டியிருந்தது... நான் முறைத்ததை அவன் கவனிக்கவில்லை.... இப்படி நடு ரோட்டில் நின்னா தாடை ஒடையாம என்ன பண்ணும் என மனதில் நினைத்துக் கொண்டே வேகத்தை கூட்டினேன்... திடீரென என்னிடமிருந்து ஏதோ விழுவது போல உணர்ந்தேன்... வேகத்தை சற்றே குறைத்து என்னவாக இருக்கும் என்று திரும்பிப்பார்த்தேன்... தொடர்ந்து தொடர்ந்து தொலைத்து இந்த மாதத்தில் ஏழாவதாக வாங்கிய பேனா கிடந்தது.... திரும்பி எடுக்கலாமா அல்லது பின்னால் வரும் வாகனம் ஏறி நொறுங்கி விடுமா? என்று நினைத்துக்கொண்டே பைக்கை ஓரம் கட்டினேன்.... திரும்பி பார்க்கும் போது கீழே கிடந்த பேனாவை ஒரு கார் கடந்து போனது... ஐயோ என் பேனா ...... ஆஹா பேனா தப்பித்தது.... பைக்கை நிறுத்தி விட்டு திரும்பி நடக்க முற்பட்டேன்.... ஒரு இளைஞன் தன் பைக்கில் இருந்துகொண்டே குனிந்து அந்த பேனாவை எடுத்துக் கொண்டிருந்தான்.... மெதுவாக என்னை நோக்கி ந‌க‌ர்ந்து வ‌ந்தான்.... பேனாவை என்னிட‌ம் நீட்டினான்... லேசாக‌ வ‌ழிந்து கொண்டே தேங்க்ஸ் சொல்லி பேனாவை வாங்கி கொண்டு அந்த‌ இளைஞன் முக‌த்தை பார்த்தேன்.... ஆமாம் சில‌ வினாடிக‌ளுக்கு முன் நான் முறைத்த‌, ம‌ன‌தில் திட்டிய‌ அதே இளைஞ(ர்).... பைக்கை ஸ்டார்ட‌ செய்தேன்.... உடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....

மிச்சமிருக்கிறது

வேகமாய் மனித தலைகள் மறைகின்றன.....
மெல்ல இருள் தழுவுகிறது....
வெளிச்சத்தில் ஆனந்தமாய் இருந்த அலைகள்
தழுவும் இருளில் மிகுந்த மிரட்சியாய்....

அலைகளை விட்டு எதிர்திசையில் பாதம் பதிக்கிறேன்
கனக்கும் மனதைவிட
சற்று அதிகப்படியாகவே பாதம் பதிகிறது
மணல் என்னை உள்வாங்கிக்கொள்கிறது.....

குட்டியாய் ஒரு அலை குதித்தோடி வந்து
பிடனி பிடிப்பது போல் பிரமை....

எங்கோ விடுபட்டு பறந்து வந்த
முனை கிழிந்த வெள்ளை காகிதம்
என்னிடம் படபடக்கிறது
தனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கின்றதென்று......